“இந்தியாவின் எந்தப் பகுதியிலும், எந்தவொரு அரசாங்கமும் மக்களின் உயிர்களை பாதுகாக்க தவறுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்” என அனைத்திந்திய மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அசதுத்தீன் ஒவைசி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் வன்முறை வெடித்துள்ள நிலையில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காள சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த ஞாயிறன்று அறிவிக்கப்பட்டது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ் 213 இடங்களில் வென்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக்கொண்டது. முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் போது மாநிலத்தின் பல பகுதிகளில் தங்கள் மீது ஆளும் திரிணமூல் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதாக பாஜக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இத்தாக்குதலில் தங்கள் கட்சி தொண்டர்கள், ஆதரவாளர்கள் என 6 பேர் கொல்லப்பட்டதாகவும் ஏராளமான கடைகள் சூறையாடப்பட்டு, தீ வைக்கப்பட்டதாகவும் பாஜகவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் என சில பதிவுகளையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து மேற்கு வங்க அரசிடம் உள்துறை விளக்கம் கேட்டுள்ளது. இதற்கிடையில் திரிணமூல் தொண்டர்கள் அமைதி காக்கவேண்டும் என்றும் வன்முறையை தூண்ட வைக்கும் பாஜகவினரின் முயற்சிகளுக்கு பலியாகி விடக் கூடாது என்றும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவுறுத்தியுள்ளார்.