தி.மு.க ஆட்சி அமைந்தபிறகு நச்சு ஆலையான ஸ்டெர்லைட் எப்போதும் எந்தச் சூழலிலும் திறக்கப்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வந்த வேதாந்தா நிறுவனம் “ஆக்சிஜன் மட்டும் தயாரிக்க அனுமதியுங்கள். அந்த ஆக்சிஜனை இலவசமாக வழங்குகிறோம்” என்று உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து முடிவெடுப்பதற்காக முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி மற்றும் தி.மு.கழக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி ஆகியோர் பங்கேற்றனர்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய கனிமொழி எம்.பி., “உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் கருத்துகளை முன்வைக்கும் போது, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் பிளாண்ட் மட்டும் செயல்பட அனுமதிப்பது என்றால், முக்கியமான சில கருத்துகளை முன்வைக்க வேண்டும். அதில்,

* இந்த அனுமதி தற்காலிகமானது.

* அதுவும் ஆக்சிஜன் தயாரிக்க மட்டுமே இந்த அனுமதி. வேறு எந்த வடிவிலும் ஆலையை இயக்கக் கூடாது,

* ஆக்சிஜன் மட்டுமே தயாரிக்கப்படுகிறது என்பதை கண்காணித்திட – மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரி ஆகியோர் தலைமையில் ஒரு குழு அமைத்திட வேண்டும்.

* அக்குழுவில் தூத்துக்குடி மாவட்ட மக்கள், ஸ்டெர்லைட் போராட்டக் குழு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெற்றிட வேண்டும்.

* ஆக்சிஜன் தயாரிக்க ஒரு குறிப்பிட்ட “காலவரம்பிற்கு” மட்டும் அனுமதி வழங்க வேண்டும்.

* இப்போது ஆக்சிஜன் தயாரிக்க வழங்கப்படும் அனுமதியை எக்காரணம் கொண்டும் ஒரு முன்னுதாரணமாக வைத்து – ஆலையை நிரந்தரமாக திறக்க அனுமதி கோரக்கூடாது என்று அரசு உத்தரவிலேயே தெளிவுபடுத்திட வேண்டும்.

* ஸ்டெர்லைட் ஆலையில் இந்த அனுமதியின் பெயரில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை தமிழக மக்களுக்கு தேவைப்படும் அளவிற்கு இலவசமாக அளிக்க வேண்டும்.

* மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையின் சொந்த மின்சாரத்தை பயன்படுத்த அனுமதிக்க கூடாது. தமிழக அரசுதான் மின்சாரம் வழங்க வேண்டும்.

நாங்கள் கூறிய இந்தக் கருத்துகளை, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் அழுத்தமான கருத்துகளாக முன்வைக்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளதாவது:

ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்குவது தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தி.மு.கழகத்தின் சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்களும், கழகத்தின் மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சகோதரி கனிமொழி அவர்களும் பங்கேற்று, கழகத்தின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தனர்.

மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டும் தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம், அதற்கான மின்சாரத்தை வழங்கலாம் என்று தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இம்முடிவு தற்காலிகமானதுதான்.

தி.மு.க ஆட்சி அமைந்தபிறகு நச்சு ஆலையான ஸ்டெர்லைட் எப்போதும் எந்தச் சூழலிலும் திறக்கப்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.