கொரோனா தடுப்பூசி தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருள் ஏற்றுமதி மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது நிர்வாகத்தினருக்கு, சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா, தனது ட்விட்டர் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு இந்தியாவின் தேவை எங்களுக்கு புரிகிறது என அதிபர் பைடனின் நிர்வாக குழுவினர் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு தேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருளை ஏற்றுமதி செய்ய, அமெரிக்க நிறுவனங்களுக்கு சட்டத்தின் மூலமாக கடிவாளம் போட்டுள்ளது அந்நாட்டு அரசு. அதன்படி போர்க்கால அடிப்படையில் Defence Production Act என்ற சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்ப் மற்றும் இந்நாள் அதிபர் பைடன் என இருவரும் நடைமுறை படுத்தியுள்ளனர். அதற்கு தான் விலக்கு கொடுக்குமாறு ஆதார் பூனவல்லா கோரிக்கை விடுத்துள்ளார். சீரம் நிறுவனம் கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.