மலையாளம், தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்தவரான நடிகை மீரா ஜாஸ்மின் ஐந்து வருடங்களுக்குப் பிறகு ‘ரீ என்ட்ரி’ கொடுக்கிறார். முதன்மைக் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவுள்ளார்.

90-ஸ் ரசிகர்களின் ஃபேவரைட் நாயகிகளில் ஒருவர் கேரளத்தைச் மீரா ஜாஸ்மின். இவருக்கு கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘ரன்’ படம்தான் அறிமுக தமிழ்ப்படம். இந்தப் படத்தில் இருந்தே ரசிகர்களின் விருப்பத்துக்குரிய ஹீரோயினாக வலம்வந்தார். இதனால், ‘புதிய கீதை’, ‘ஆஞ்சநேயா’, மணிரத்னம் இயக்கிய ‘ஆய்த எழுத்து’, ‘பரட்டை என்ற அழகுசுந்தரம்’, ‘சண்டைக்கோழி’ என பல படங்களில் நடித்து புகழ்பெற்றார். தமிழ் சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களான விஜய், அஜித் ஆகிய இரண்டு ஹீரோக்களுடன். நடித்திருக்கிறார்.

தமிழ் மற்றும் மலையாளத்தில் இதுவரை 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மீரா ஜாஸ்மின், தமிழில் நடிக்கும் முன்பே மலையாளத்தில் நடிக்கத் தொடங்கியவர். எனினும், கடந்த 2014-ல் சினிமாவுக்கு முழுக்கு போட்டவர், துபாயைச் சேர்ந்த சாப்டவேர் இன்ஜினீயர் அனில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமண செய்துகொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். 2016-ல் அவரை விவாகரத்தும் செய்துவிட்டார். இந்த நிலையில், நீண்டகாலமாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த மீரா ஜாஸ்மின் தற்போது ‘ரீ என்ட்ரி’ கொடுக்க இருக்கிறார்.

‘ரீ என்ட்ரி’யை தனது தாய்மொழியான மலையாளத்தில் இருந்தே தொடங்குகிறார். மலையாள சினிமாவின் பிரபல இயக்குனர் சத்தியன் அந்திக்காடு இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் ஜெயராமுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் மீரா ஜாஸ்மின். இதை இயக்குனர் சத்தியன் அந்திக்காடு அதிகாரபூர்வாமாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை நடுப்பகுதியில் தொடங்கும் என்று சத்யன் அந்திக்காடு தெரிவித்துள்ளார்.

மீரா ஜாஸ்மின் ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு முக்கிய கதாபாத்திரம் கொண்ட திரைப்படத்தில் நடிக்கிறார். இடையில், ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம் நடித்த ‘பூமரம்’ படத்தில் 2018-ஆம் ஆண்டில் சிறிய ரோலில் நடித்திருந்தார். எனினும், முதன்மை கதாபாத்திரம் கொண்ட மலையாளத்தில் ஒரு படத்தில் 2016-ல் தான் கடைசியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.