“கொரோனா இரண்டாம் அலை பரவல் தீவிரமாகியுள்ள நிலையில், கூட்டு முயற்சியுடன் செயல்பாட்டால் முழு முடக்கத்தை தடுக்க முடியும்” என்று பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்தார். இதன்மூலம் இப்போதைக்கு முழு முடக்கம் இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
நாட்டு மக்களிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8.45 மணிக்கு உரையாற்றிய பிரதமர் மோடி பேசியது:
“கொரோனா இரண்டாம் அலையாக உருவெடுத்து வந்திருக்கிறது. இந்தச் சூழலில் நாம் அனைவரும் முன்களப் பணியாளர்களுக்குத் துணையாக இருக்க வேண்டும். தங்கள் உயிரைப் பணயம் வைத்து முன்களப் பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், மருந்தாளுநர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பாடுபடுகின்றனர்.
மக்களின் வலியை நான் புரிந்துகொள்கிறேன். அவர்கள் கஷ்டத்தில் நான் பங்கெடுக்கிறேன். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் துக்கத்தில் பங்கெடுக்கிறேன்.
நம்முடைய பொறுமையை நாம் ஒருபோதும் இழந்துவிடக் கூடாது. ஆக்சிஜன் தேவையைப் பூர்த்திசெய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ஆக்சிஜன் தேவை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நாம் பூர்த்தி செய்வோம்.
மத்திய, மாநில அரசுகளும், மக்களும் இணைந்து சவால்களை எதிர்கொள்ள வேண்டும். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்ததை விட மருந்து உற்பத்தி பல மடங்கு உயர்ந்துள்ளது. மருந்து நிறுவனங்களுடன் உற்பத்தியை அதிகரிக்க தொடர்ந்து பேசி வருகிறேன். நமது நாட்டில் மிகப் பெரிய மருந்து நிறுவனங்கள் உள்ளன. எனவே, கவலை வேண்டாம்.
கொரோனா பாதிப்பை சமாளிக்க கூடுதல் மருத்துவ வசதிகளை செய்து வருகிறோம். குறுகிய காலத்தில் மிக அதிக மருந்து உற்பத்தியை உறுதி செய்திருக்கிறோம்.
உலகிலேயே மிகக் குறைந்த விலையில் கொரோனா தடுப்பூசி நம் நாட்டில் கிடைக்கிறது. இந்தியாவிலுள்ள அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க நடவடிகை எடுக்கப்படுகிறது. இதுவரை 12 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி தட்டுப்பாட்டை சமாளிக்க சிறப்பு முகாம் உருவாக்கப்படும். முன்களப் பணியாளர்கள், மூத்த குடிமக்கள் பெரும்பாலானோருக்கும் தடுப்பூசி கிடைத்துவிட்டது. 18 வயதுக்கு மேற்பட்டோரும் வருகிற 1-ஆம் தேதி முதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
கொரோனாவுக்கு எதிரான போரில் சரியான விஷயங்களை செய்ய இளைஞர்கள் முன்வர வேண்டும். அவசியமற்ற பணிகளுக்கு வெளியே செல்லாமல், முடிந்தவரை வீட்டிலேயே இருந்து பணியாற்ற முன்வர வேண்டும். பொதுமுடக்கத்தை அமல்படுத்தும்போது மாநில அரசுகள் கடைசி ஆயுதமாகவே பயன்படுத்த வேண்டும்.
பொருளாதாரம் பாதிக்கப்படாத வகையில் உயிர்களைக் காக்க வேண்டும் என்பதே அரசின் முயற்சி. தைரியத்தையும் அனுபவத்தையும் வைத்து மட்டுமே கொரோனா பிரச்னையை எதிர்கொள்ள முடியும். கொரோனா கட்டுப்பாட்டு மையங்களை அதிகரிப்பதன் மூலமும், கூட்டு முயற்சியாக செயல்படுவதன் மூலமும் நாடு முழுவதும் முழு முடக்கம் வருவதைத் தடுக்க முடியும்” என்றார் பிரதமர் மோடி.