கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு இன்று முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடு விதிமுறைகளை விதித்துள்ளது. இதில் முக்கிய அம்சமாக சுற்றுலாவை முழுமையாக முடக்கியிருக்கிறது. அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு பயணிகளின் வருகைக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ்பூங்கா,நேரு பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் மூடப்பட்டன. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஊட்டி படகு இல்லம்,பைக்காரா படகு இல்லம், தொட்டபெட்டா காட்சி முனை போன்றவையும் பயணிகளுக்குத் தடை செய்யப்பட்டு மூடப்பட்டன. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களும் மூடப்பட்டன.
மேலும் சுற்றுலா நோக்கில் நீலகிரிக்குள் யார் வந்தாலும் திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளின் வருகையைத் தடை செய்தது ஒரு புறம் வரவேற்பைப் பெற்றாலும் சுற்றுலா வருவாயைச் சார்ந்துள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 50 சதவிகித சுற்றுலாப் பயணிகளையாவது அனுமதிக்கவேண்டும் அல்லது நிவாரண உதவித் தொகையை வழங்க வேண்டும் என நாள்தோறும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிறு-குறு வணிகர்கள், படகு ஓட்டுனர்கள் ஊட்டி சேரிங் கிராஸ் பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 20 ஆண்டுகளாக படகு ஓட்டுனராக இருந்து வரும் துளசிதாஸ் நம்மிடம் பேசுகையில்,“டெய்லி பத்து ரவுண்ட் பதினஞ்சி ரவுண்டு படக ஓட்டினா ஒரு நாளைக்கு 200,300 கெடைக்கும். ஏற்கனவே ஒன்பது மாசம் லாக்டெளன்ல சோறு தண்ணிக்கே வழியில்லாம பாடுபட்டோம்.
இந்த ரெண்டு மாசமா தான் நிம்மதியா கொஞ்சம் கஞ்சி குடிச்சோம். இப்போ இரண்டாவது லாக்டௌன் கொண்டுவந்து எல்லார் வயித்துலயும் அடிச்சிட்டாங்க. நாங்க கேட்கிறது குறைந்தபட்ச டூரிஸ்ட அனுமதிங்க அப்படி இல்லன்னா எங்களுக்கான நிவாரணத்தொகையாவது கொடுங்க” என வேதனையுடன் தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.