“லாக்டெளன் என்பது மாநிலங்களின் கடைசி ஆயுதமாக இருக்க வேண்டும்!”
பிரதமர் மோடி, “லாக் டெளன் என்பது கடைசி ஆயுதமாக இருக்க வேண்டும் என்பதே நான் மாநில அரசுகளை கேட்டுகொள்கிறேன். அதற்கு பதிலாக சிறிய அளவிலான கட்டுப்பாட்டு பகுதிகளை அதிகரிக்கலாம்.
புலம் பெயர் தொழிலாளர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே தங்குமாறு மாநில அரசுகள் பார்த்துகொள்ள வேண்டும். தொழிலாளர்களுக்கு மாநிலங்கள் வழங்கும் இந்த நம்பிக்கை அவர்களுக்கு நிச்சயம் உதவும். அவர்கள் இருக்கும் நகரத்திலே அவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.
மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. சில நகரங்களில், கொரோனாவுக்கு என பிரத்யேக மருத்துவமனைகள் கட்டப்படுகின்றன”
தடுப்பூசி திட்டம்! – இளைஞர்களுக்கு மோடி அழைப்பு
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “அடுக்குமாடி குடியிருப்புகள், தெருக்களில் குழுக்கள் அமைத்து தடுப்பூசி பணியை விரிவுபடுத்துவோம். அவசியமற்ற பணிகளுக்கு வெளியே செல்லாமல் முடிந்தவரை வீட்டிலேயே இருந்து பணியாற்ற முன்வரவேண்டும். நாம் கட்டுப்படுவதன் மூலமே கொரோனா பரவாமல் கட்டுப்படுத்த முடியும்.
கொரோனாவுக்கு எதிரான போரில் சரியான விஷயங்களை செய்ய இளைஞர்கள் முன்வரவேண்டும். இளைஞர்கள் தானாக முன்வந்து தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும்.
கொரோனா கட்டுப்பாட்டு மையங்கள் அதிகரிப்பதன் மூலம் முழுமுடக்கத்தை வருவதை நாம் தவிர்க்க முடியும். முழுமுடக்கம் என்பது கடைசி ஆயுதம். வீட்டில் உள்ள பெரியவர்கள் தேவையில்லாமல் வெளியே செல்வதை தடுப்பது அந்த வீட்டில் உள்ள குழந்தைகளின் பொறுப்பு. தைரியம் மற்றும் அனுபவத்தை வைத்து மட்டுமே குறை பிரச்சனையை எதிர்கொள்ள முடியும்” என்றார் மோடி.
“நாட்டில் தற்போதைய தேவை கூட்டு முயற்சிதான்”
பிரதமர் மோடி, “கொரோனா தடுப்பு சம்பந்தமான எந்த ஒரு வசதிகளும் நம்மிடம் இல்லாமல் இருந்தது.
முகக்கவசம் தயாரிப்பு முதல் வென்டிலட்டர் தயாரிப்பு வரை கடந்த சில மாதங்களில் தான் நாம் பெரிய அளவில் மருத்துவ கட்டமைப்புகளை உருவாக்கி இருக்கிறோம். கடந்த வருடம் இருந்த மோசமான சூழ்நிலை இப்போது இல்லை. நாட்டில் தற்போதைய தேவை கூட்டு முயற்சிதான்”
`பொருளாதாரம் பாதிக்கப்படாத வகையில் உயிரை காக்க வேண்டும்’
பிரதமர் மோடி, “பொருளாதாரம் பாதிக்கப்படாத வகையில் உயிரை காக்க வேண்டும் என்பதே நமது நோக்கம்.
18 வயதுக்கு மேற்பட்டோரும் வருகிற ஒன்றாம் தேதி முதல் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். மூத்த குடிமக்கள் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி கிடைத்துவிட்டது. இதுவரை 12 கோடிக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது” என்றார்.
மீண்டும் கொரோனாவுக்கு எதிரான யுத்தம்!
மோடி, “நாடு மீண்டும் ஒருமுறை கூட கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் பங்கேற்கிறது. நாட்டில் ஆகிசிஜன் தட்டுப்பாட்டை போக்க முழு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தேவைப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் ஆக்சிஜன் கிடைக்க வழிவகை செய்யப்படும். ஆக்சிஜன் தேவை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நாம் பூர்த்தி செய்வோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “நம்முடைய பொறுமையை நாம் ஒருபோதும் இழந்துவிடக்கூடாது. இந்த சூழலில் நாம் அனைவரும் முன் களப் பணியாளர்களுக்கு துணையாக இருக்க வேண்டும். தங்கள் உயிரைப் பணயம் வைத்து முன்கள பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். மக்கள் நினைத்தால் கொரோனாவை முறியடிக்க முடியும். நாட்டு மக்கள் அனைவரும் நினைத்தால் கொரோரானாவை முறியடிக்க முடியும் என நான் நம்புகிறேன். மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் மருந்தாளுநர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்” என்றார்.
பிரதமர் மோடி உரை…
பிரதமர் மோடி, “கொரோனாவால் நாம் மீண்டும் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறோம். கொரோனா இரண்டாவது அலையாக உருவெடுத்து வந்திருக்கிறது. கொரோனாவின் இப்போதைய பாதிப்பில் இருந்தும் நம்மால் மீண்டு வர முடியும்.
மக்கள் அனுபவித்த வேதனையை நான் அறிவேன். உங்களின் குடும்ப உறுப்பினராக, உங்கள் வருத்தத்தை பகிர்ந்து கொள்கிறேன்.” என்றார்.
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை:
இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில நாள்களாக பிரதமர் மோடி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். நாடு முழுவதும் தடுப்பூசி மற்றும் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை என தகவல் வெளியாகி உள்ள நிலையில் பிரதமர் மோடி, அமைச்சர்கள், அதிகாரிகள், நாட்டின் மூத்த மருத்துவர்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் என தொடர் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் இப்போது நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்த இருக்கிறார்.