தமிழகத்தில் 10,000-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் இரண்டாம் வாரம் அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா தொற்று, நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,723 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 3,304 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 9,91,451 நபர்களுக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தொடங்கியது ஆலோசனைக் கூட்டம்!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. கூட்டத்துக்குப் பின்னர் புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்புகள் வரலாம் எனத் தகவல்.
ஒரே நாளில் 2,61,500 பேருக்கு தொற்று!
இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் புதிதாக 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 1,47,88,109 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,501. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,77,150-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 1,28,09,643-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 18,01,316 பேர் சிகிசையில் இருக்கிறார்கள்.
இன்று முதல்வர் முக்கிய ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினரசி பாதிப்பு 9,000 -ஐ கடந்துள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரம் பெற்றுள்ளன. முன்னதாக சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுடனும் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சமீபத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்துக்குப் பின் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிய அறிவிப்புகள் எதுவும் வரவில்லை.
மேலும் அந்த கூட்டத்தில் முதல்வரோ அமைச்சர்களோ கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் இன்று முதல்வர் சென்னையில் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதில் முக்கிய அமைச்சர்களும் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்கிறார்கள். இன்றைய கூட்டத்துக்குப் பின்னர் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கூடுதல் கட்டுப்பாடுகள் வருமா என்பது தெரிய வரும்.