இந்தியாவின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி நிறுவனம் பெரும்பாலான கார்களின் விலையை உயர்த்தி இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த விலை ஏற்றம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கார் உற்பத்திக்கான செலவுகள் கூடி இருப்பதால் இந்த விலை ஏற்றத்தை செய்ய வேண்டி உள்ளதாக மாருதி நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.
இதில் ஸ்விப்ட் மற்றும் செலிரியோ கார்களை தவிர மற்ற அனைத்து கார்களின் விலையையும் மாருதி உயர்த்தியுள்ளது. அதிகபட்சமாக 22500 ரூபாய் வரை பல்வேறு கார்களில் விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஜனவரி மாதத்தில் கார்களின் விலையை மாருதி உயர்த்தி இருந்தது. இந்நிலையில் இதே ஆண்டில் இரண்டாவது முறையாக கார்களின் விலையை அந்நிறுவனம் உயர்த்தியுள்ளது.
இந்த விலை ஏற்றம் குறித்து கடந்த மார்ச் மாதத்தின் பிற்பாதியில் மாருதி நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் டெல்லியில் எக்ஸ் ஷோரூம் கார்களின் விலையில் வழக்கத்தை விடவும் 1.6 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.