முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று சீசனை மிகவும் சிறப்பாகத் தொடங்கியிருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. முதல் போட்டியில் கடைசி பந்து வரை சென்று மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியவர்கள், நேற்று உறுதியாய்த் தோற்கும் நிலையில் இருந்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதுவும் 149 என்ற இலக்கை ‘டிஃபண்ட்’ செய்து வென்றிருக்கிறது அந்த அணி. இந்த வெற்றிகளில் பல பாசிட்டிவ் விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை வைத்துப் பார்க்கும்போது, இது கோலிக்கான, ஆர்.சி.பி-க்கான சீசனாக இருக்குமோ என்று தோன்றுகிறது!
2 போட்டிகள் தானே ஆகியிருக்கிறது, அதற்குள் பெங்களூருவின் சீசன் என்று சொல்லவேண்டுமா என்று தோன்றலாம். ஆனால், இத்தனை ஆண்டுகள் இல்லாத மாற்றங்களை இந்த 2 போட்டிகளில் காட்டியிருக்கிறது கோலியின் அணி. காட்டியிருக்கிறார் கோலி. அதனால், ஒரு மிகப்பெரிய மாற்றம் நிகழ்வதற்கான அத்தனை வாய்ப்புகளும் இருக்கவே செய்கிறது. அந்த மாற்றங்கள் என்னென்ன, ஏன் இந்த சீசன் பெங்களூருக்கு சாதகமாக அமையும். தெரிந்துகொள்ள, இந்த முழு வீடியோவையும் பாருங்கள்.
நேற்றைய போட்டியில் கோலி கொண்டு வந்த பௌலிங் மாற்றங்கள் மிகவும் சிறப்பாக இருந்தது. பவர்ப்ளேவில் வாஷிங்டன் சுந்தரை குறைவாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, அவரது முடிவுகள் சிறப்பாகவே இருந்தன. அதிலும் குறிப்பாக, விக்கெட்டுகளே கிடைக்காத நேரத்தில், 14-வது ஓவரில் ஜேமீசனை கொண்டுவந்தது மாஸ்டர்ஸ்டிரோக் முடிவாக அமைந்தது. தன் முதல் ஸ்பெல்லில் ஓவர் தி ஸ்டம்ப் வந்து வார்னருக்கு பந்துவீசிய ஜேமிசன், இம்முறை அரௌண்ட் தி ஸ்டம்ப் வந்து வீச, இரண்டாவது பந்திலேயே வெளியேறினார் வார்னர். சொல்லப்போனால், சன்ரைசர்ஸ் அணியின் வீழ்ச்சி ஷபாஸ் அஹமது ஓவரில் தொடங்கவில்லை. இந்த ஓவரிலேயே ஆரம்பித்துவிட்டது.
ஜேமிசன் பெங்களூருக்கு நம்பிக்கை கொடுக்க, வெற்றியை மிக மிக அருகில் அழைத்துவந்துவிட்டார் ஷபாஸ் அஹமது. 17-வது ஓவரில் வெறும் 1 ரன் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்துவார் என்று யார் எதிர்பார்த்திருப்பார்! 17-வது ஓவரை அவருக்கு கோலி கொடுப்பார் என்பதை யார் எதிர்பார்த்திருப்பார்? அதுவும், ஜேமிசன், சிராஜ், வாஷிங்டன் சுந்தர் போன்ற பிரதான பௌலர்களுக்கு ஓவர் இருக்கும்போது, ஒரு ஓவர் மட்டுமே வீசியிருந்த இவர் கையில் கோலி பந்தைக் கொடுப்பார் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.
அதுவரை கோலியின் முடிவுகளை விமர்சித்துக்கொண்டிருந்த வல்லுநர்கள், இந்த ஓவருக்குப் பிறகு அவரைக் கொண்டாடத் தொடங்கிவிட்டார்கள். ஒரே ஓவரில் தன் மீதான, தன் தலைமையின் மீதான விமர்சனத்தை மாற்றிவிட்டார் விராட். ஜானி பேர்ஸ்டோ, மனிஷ் பாண்டே, அப்துல் சமத் என 3 வீரர்களை அந்த ஓவரிலேயே பெவிலியனுக்கு அனுப்பி வெற்றியை வசமாக்கிவிட்டார் அவர்.
எப்போதுமே தன் அணியின் பௌலர்கள் மீது, குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர்கள் மீது அதிக நம்பிக்கை வைப்பவர் கோலி. முகமது சிராஜ் அதற்கு சாட்சி. இருந்தாலும், நட்சத்திர வீரர்கள் என்று வரும்போது, எப்போதும் அவர்கள் மீது இவருக்கு ஈர்ப்பு அதிகம். அவர்களை அதிகம் நம்புவார். அதிகம் பயன்படுத்துவார். வயதானாலும் ஸ்டெய்னைப் பயன்படுத்தினாரே அப்படித்தான். ஆனால், இம்முறை இதில் பெரிய மாற்றம் தெரிகிறது. அதிகம் அறியப்படாத ஹர்ஷல் படேலை முழுமையாக நம்பி டெத் பௌலராகப் பயன்படுத்துகிறார் விராட். தன் திறமையை அவரும் நிரூபித்துக்கொண்டிருக்கிறார். அதனால், பல ஆண்டுகள் அந்த அணியின் பெரிய பிரச்னையாக இருந்தது இப்போது சீராவதுபோல் தெரிகிறது.
இவை அனைத்தையும் விடவும் மிக மிக மிக முக்கியமான ஒரு மாற்றத்தை தன் அணியில் செய்திருக்கிறார் விராட். ராயல் சேலஞ்சர்ஸின் பயணத்தில் மிகமுக்கிய தாக்கம் ஏற்படுத்தப்போகிற அந்த மாற்றம் என்ன? முழுமையாகத் தெரிந்துகொள்ள வீடியோவைப் பாருங்கள்.