இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை தீவிரம் அடைந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக தற்போது இந்தியாவில் 1.5 லட்சத்திற்கும் அதிமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வார் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளா திருவிழா காரணமாக வைரஸ் தொற்றின் தாக்கம் மேலும் தீவிரம் அடையுமோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. சுமார் 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பக்தர்கள் கங்கை நதியின் புனித நீராடுவது வழக்கம்.
இந்த சூழலில் ஞாயிறு இரவு 11.30 மணி முதல் திங்கள் மாலை 5.00 மணி வரை விழாவில் பங்கேற்ற சுமார் 18,169 பக்தர்களை பரிசோதித்ததில் 102 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. திங்கள் மாலை வரை இந்த விழாவில் சுமார் 28 லட்சம் பேர் பங்கேற்றுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.
நகரின் பெரும்பாலான பகுதிகளில் முகக்கவசம் அணிவது, உடலின் வெப்பநிலையை பரிசோதிப்பது மாதிரியான கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டு உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.
கொரோனா பரிசோதனை முடிவுகளை வைத்திருக்கின்ற பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என்றாலும் 50 பேரில் 15 பேர் பரிசோதனை முடிவுகள் இல்லாமல் விழாவுக்கு வருவதாகவும், அவர்களை விழாவில் பங்கேற்க அதிகாரிகள் அனுமதிப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதனை விழாவில் பங்கேற்ற பக்தர்களும் உறுதி செய்துள்ளனர்.