கொரோனாவின் அதிதீவிர பரவலால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மூன்று மாநிலங்களான மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் ஆகியவற்றில் உள்ள 50 மாவட்டங்களில் மக்களால் பாதுகாப்பு நெறிமுறைகள் கடுமையாக மீறப்பட்டு வருவதாக மத்திய அரசு ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனால், கடுமையான நடவடிக்கைகளை செயல்படுத்துமாறு இந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்த எச்சரிக்கையானது, மத்திய குழுக்கள் கடந்த வாரம் இந்த மாநிலங்களுக்கு சென்று ஆய்வு நடத்திய பின் வெளியாகி இருக்கிறது.
இந்த ஆய்வின்போது மாநில நிர்வாகங்களால், குறிப்பாக கட்டுப்பாட்டு மண்டலங்களில், கண்காணிப்பு நடவடிக்கைகளில் பற்றாக்குறை இருப்பதைக் கண்டறிந்து அதிர்ச்சி அடைந்தது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறைக்கு குழுவின் அதிகாரிகள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்தனர். அதனடிப்படையில், மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு கடிதம் எழுதினார். அதில், “ஆர்டி-பி.சி.ஆர் கருவிகளை பயன்படுத்தி போதுமான சோதனை செய்தல், கொரோனா பாதுகாப்பு பணியில் போதுமான பணியாளர்கள் இல்லை என்பது மத்திய குழுக்கள் தங்கள் சோதனையில் அறிந்துகொண்டுள்ளது.

அதேநேரத்தில், மகாராஷ்டிராவுக்கு அனுப்பப்பட்ட குழுக்கள், குறிப்பாக சதாரா, சாங்லி மற்றும் அவுரங்காபாத் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டுள்ளன. அதேபோல் சதாரா, பண்டாரா, பால்கர், அமராவதி, ஜல்னா போன்ற சில மாவட்டங்களில் சோதனைத் திறன் அதிகமாக உள்ளது” என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.

இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மற்றொரு முக்கிய பிரச்னை, தனிமைப்படுத்தலில் உள்ள கொரோனா பாதிப்பு அடைந்தவர்களை சரியாக கண்காணிப்பதில்லை என்பதுதான். இதனால் இறப்பு விகிதம் இங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், ஆர்டி-பி.சி.ஆர் சோதனை வசதிகளின் பற்றாக்குறையும் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா மற்றும் லூதியானாவில் பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது.

மத்தியக் குழுவின் ஆய்வில் வெளிவந்த மற்றொன்று, சில மாவட்டங்கள் வெளியில் உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களிலிருந்து ஏராளமான கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன என்பதாகும். இவற்றை கட்டுப்படுத்த கட்டுப்பாட்டு பகுதிகளை விரிவுபடுத்துதல், போதுமான கண்காணிப்பு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் போன்ற அறிவுரைகள் மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. கூடுதல் தேவைக்கேற்ப சுகாதாரப் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இது தொடர்பாக இந்துஸ்தான் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில், “ஆர்டி-பி.சி.ஆர் மற்றும் விரைவான ஆன்டிஜென் சோதனை விகிதம் பல மாவட்டங்களில் இன்னும் அதிகரிக்க வேண்டி இருக்கிறது. கொரோனாவை கண்டறிய 70% சோதனைகள் ஆர்டி-பி.சி.ஆர் மூலம் செய்யப்பட வேண்டும். அதேபோல் விரைவான ஆன்டிஜென் சோதனை என்பது கட்டுப்பாட்டு மண்டலங்களில் (Containment zones) பயன்படுத்தப்பட வேண்டும். ஏனெனில், ஒரு குறுகிய இடைவெளியில் அங்கு விரைவான சோதனை தேவைப்படும்” என்று கூறியிருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.