ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கிருஷ்ணபட்டணம் துறைமுகத்தின் 25% பங்குகளை ரூ.2,800 கோடி கொடுத்து அதானி போர்ட்ஸ் நிறுவனம் அண்மையில் கையகப்படுத்தியது. ஏற்கெனவே 75% பங்குகள் இருந்த நிலையில், மீதம் இருந்த 25% பங்குகளையும் வாங்கியுள்ளது. இந்தத் துறைமுகம் 20 கி.மீ நீர்பரப்பு மற்றும் 6,800 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட, அனைத்து வானிலையையும் தாக்குப் பிடிக்கும் ஆழமான துறைமுகமாகும்.
இந்லையில், தற்போது அதானி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துடன், ஆன்லைனில் பொருள்களை விற்பனை செய்யும் முன்னணி வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ஃப்ளிப்கார்ட் இணைந்துள்ளது. இந்த வர்த்தக இணைப்பின் மூலம், தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வேகமாகப் பொருள்களைக்கொண்டு சேர்க்க முடியும் என ஃப்ளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வர்த்தக இணைப்பை முன்னிட்டு, ஃப்ளிப்கார்ட் நிறுவனத்துக்குக் குத்தகைக்கு விடுவதற்காக மும்பையில் 5,34,000 சதுர அடியில் ஒரு சரக்கு மையத்தை அதானி நிறுவனம் உருவாக்குகிறது. இந்த மையத்தைப் பயன்படுத்திக்கொள்வதன் மூலம் மேற்கு இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்குப் பொருள்களைத் துரித வேகத்தில் வழங்க முடியும் என ஃப்ளிப்கார்ட் நிறுவனம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்த மையமானது நடப்பு நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்குள் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மையத்தில்தான் பொருள்கள் சேமிக்கப்பட்டு, பேக் செய்யப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
அதானி குழுமத்துடன் ஃப்ளிப்கார்ட் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, சென்னையில் உள்ள அதானி கோனெக்ஸ் பிரைவேட் லிமிடெட் கிளையில், ஃப்ளிப்கார்ட் தனது தகவல் மையத்தை அமைக்கவுள்ளது. இந்த டேட்டா சென்டரில்தான், ஃப்ளிப்கார்ட் நிறுவனம் தொடர்பான தகவல்கள் சேமிக்கப்படும். இதன் மூலம் சுமார் 2,500 பேருக்கு நேரடியாகவும், பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என ஃப்ளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
இந்த பிசினஸ் இணைப்புக்குப் பிறகு, ரியல் எஸ்டேட், போக்குவரத்து, பசுமை எரிவாயு ஆகிய துறைகளிலும் இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.