என் தாயைப்பற்றியே இழிவுப்படுத்தி பேசியுள்ளனர். நாளை திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் நிலை என்னவாகும் என்று உணர்ச்சிவசப்பட்டு, தழுதழுத்த குரலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.
சென்னை திருவொற்றியூரில் நடந்த தேர்தல் பரப்புரையில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி “திமுகவை சேர்ந்த பொறுப்பாளர் ஒருவர் என் தாயைப்பற்றி கீழ்த்தரமாக பேசியுள்ளார். இது குறித்து பேச வேண்டாம் என்றுதான் நினைத்தேன், தற்போது தாய்மார்களை பார்த்ததால் இதனை பேசுகிறேன். ஒரு சாதாரண மனிதன் முதலமைச்சராக இருந்தால், என்னென்னவெல்லாம் பேசுவார்கள் என்று பாருங்கள். இன்று ஒரு முதல்வருக்கே இந்த நிலைமை என்றால், உங்களுக்கெல்லாம் யார் பாதுகாப்பு கொடுப்பது. ஒருவேளை திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களின், தாய்மார்களின் நிலை என்னவாகும் என்று சிந்தித்து பாருங்கள்.
தாய்மார்களை கொச்சைப்படுத்தி, இழிவுப்படுத்தி பேசியவர்களுக்கு தக்க தண்டனையை நீங்கள் வழங்க வேண்டும். நான் ஒரு சாதாரண குடும்பத்தில் உங்களைப்போலவே பிறந்து வளர்ந்தவன், என் தாய் இறந்துவிட்டார், அவரைப்பற்றியே இழிவாக பேசுகிறார்கள். தாய்தான் அனைவருக்கும் உயர்ந்த ஸ்தானம், அதனால் தாயை இழிவாக பேசியவர்களுக்கு ஆண்டவன் தண்டனை வழங்குவார். இப்படிப்பட்டவர்கள் ஆட்சிக்கு வந்தால் எப்படி அராஜகம் செய்வார்கள், பெண்களை எப்படி இழிவு படுத்துவார்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்” என தெரிவித்தார்
முன்னதாக திமுக எம்.பி ஆ.ராசா, எடப்பாடி பழனிசாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்தது தமிழக அரசியல் களத்தில் கடும் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது.