தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் மேற்கொண்டார். இந்த நிகழ்வின்போது, தி.மு.க மாநில விவசாய அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சின்னசாமி, முதல்வர் முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைந்தார். தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில், அ.தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ஜ.கவின் மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலையை ஆதரித்து, க.பரமத்தியில் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி, வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர்,“மத்திய பா.ஜ.க அரசால் தமிழகத்திற்கு எண்ணற்ற திட்டங்கள் கிடைத்துள்ளன. ரூ.1 லட்சம் கோடி , வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால், தமிழகத்தில் உள்ள சாலைகள் தரமான சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. காங்கிரஸ் மத்தியில் ஆண்டபோது, தி.மு.க சார்பில் அப்போது சாலைப் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு, தமிழ்நாட்டுக்கு இவ்வளவு நிதியை மத்திய அரசிடம் கேட்டுப் பெற்று தந்தாரா?. நீர் மேலாண்மை திட்டங்களை அ.தி.மு.க அரசு தீட்டி குளம் ஏரிகள் தூர்வாரப்பட்டு தமிழகத்தில் முதல்முறையாக குடிமராமத்து திட்டங்களை மேற்கொண்ட ஒரே அரசு, அ.தி.மு.க அரசு தான்.
காவிரி – கோதாவரி இணைப்புத் திட்டத்தை மத்திய அரசிடமிருந்து பெற்று தமிழகத்தில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு வருகிறது அ.தி.மு.க அரசு. ஆனால், தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதுது காவிரி நீர் பிரச்னை தீர்க்கப்படவில்லை. நான் முதல்வராக தமிழகத்தில் பொறுப்பேற்ற பிறகு, ஓய்வுபெற்ற தலைமை பொறியாளர் இரண்டு பேர் மற்றும் ஓய்வு பெற்ற பொறியாளர் மூன்று பேர் என ஐந்து பேர் கொண்ட குழுவினை தமிழகம் முழுவதும் அனுப்பினேன். எங்கெல்லாம் நீர்நிலைகளை தூர்வார வேண்டும், புதிய அணைகள் கட்ட வேண்டுமென ஆய்வறிக்கை வழங்க உத்தரவிட்டு, அவர்களின் ஆய்வறிக்கையின் பெயரில்தான் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புகழூர் பகுதியில் கதவணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது.
Also Read: `ஸ்டாலின் சுயமாக இல்லை; வீட்டுக்குள் இருக்கும் ஒரு சக்தி அவரை இயக்குகிறது’ – சின்னசாமி குற்றச்சாட்டு
ஸ்டாலின் முதல்வராகவேண்டும் எனக் கனவு கண்டுகொண்டிருக்கிறார். ஆட்சியை கவிழ்க்க முயன்று ஓடிப்போனவர் தான், தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி. வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன் போலத்தான், செந்தில் பாலாஜி. ஆட்சியைக் கலைக்க திட்டமிட்டு சதி செய்தார். அவர் கனவு நனவாகாது. அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் 5 ஆண்டுகளில் 2 சின்னங்களில் போட்டியிட்டவர். இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டார். அப்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன். அதில் வெற்றி பெற்றவர், அதன்பிறகு அ.தி.மு.க எம்.எல்ஏ-க்கள் சிலரை சேர்த்துக் கொண்டு, தி.மு.க தலைவரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு, எனது ஆட்சியை கலைக்க முயற்சி செய்தார். அ.தி.மு.க ஊழல் செய்வதாக ஸ்டாலின் கூறுகிறார்.

ஆனால், பக்கத்தில் யாரை வைத்திருக்கிறார்? செந்தில்பாலாஜியைத்தான் வைத்திருக்கிறார். நல்லவருக்கு வாக்களியுங்கள். தி.மு.க ஓர் அராஜக கட்சி, ரவுடி கட்சி, அட்டூழியம் செய்பவர்கள். உதயநிதி ஸ்டாலின் டி.ஜி.பியையே மிரட்டுகிறார் என்றால், நாமெல்லாம் எம்மாத்திரம். ஸ்டாலின், ‘நான் முதல்வரானால்..’ எனக்கூறி அதிகாரிகளை மிரட்டுகிறார். அதிகாரிகள் என்ன பிரசாரத்திற்கா செல்கின்றனர். எவ்வளவு அச்சுறுத்துகின்றனர் பாருங்கள். அதிகாரிகள் நிலை எப்படியோ அப்படிதான் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மக்களும் படாதபாடுபடுவார்கள்” என்றார்.