மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இம்முறை எப்படியும் மேற்கு வங்கத்தில் தாமரையை மலரச் செய்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக தனது ஒட்டுமொத்த அணியையும் மேற்கு வங்கத்தை நோக்கி திருப்பி இருக்கிறது. அவர்களுக்கு நானும் குறைந்தவர் இல்லை என்று மம்தா பானர்ஜியும் செயல்பட்டு வருகிறார். பாஜக, பெண்களை கவரும் வகையில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இத்தேர்தல் அறிக்கையில் தமிழக கட்சிகளை மிஞ்சிவிடும் அளவுக்கு தேர்தல் வாக்குறுதிகளை அள்ளித்தெளித்துள்ளது.
இந்தியாவில் 1970-ம் ஆண்டில் இருந்து குடியுரிமை இல்லாமல் வசிக்கும் அகதிகளுக்கு குடியுரிமையும், அவர்களின் குடும்பத்திற்கு ஆண்டுக்கு 10 ஆயிரமும் வழங்கப்படும். ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்து குடியுரிமைச்சட்டம் அமல்படுத்தப்படும். பெண் குழந்தைகளுக்கு முழுமையான இலவச கல்வி வழங்கப்படும் என்றும், அவர்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும், பெண்கள் இலவசமாக பஸ்சில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
200 யூனிட் வரை வீட்டு பயன்பாட்டிற்கான மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். ஒரு பெண் குழந்தை இருக்கும் வீட்டில் 50 ஆயிரத்திற்கு பெண் குழந்தை பெயரில் பத்திரம் வழங்கப்படும். அன்னபூர்ணா கேண்டீனில் 5 ருபாயிக்கு சாப்பாடு வழங்கபடும். அரிசி மற்றும் கோதுமை கிலோ ஒரு ரூபாயிக்கு வழங்கப்படும். நிலம் இல்லாத விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 4 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும். நோபல் பரிசு போன்று ரவீந்திரநாத் தாக்கூர் பெயரில் விருது ஒன்று ஏற்படுத்தப்படும் என்பது உட்பட பல்வேறு சலுகைகளை அள்ளித்தெளித்து இருக்கிறது.
இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார். பிரதமர் நரேந்திர மோடியும் மேற்கு வங்கத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். பங்குரா என்ற இடத்தில் நடத்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், எனது தலையை நீங்கள் எட்டி உதைக்கலாம். ஆனால் மேற்கு வங்கத்தின் கனவுகளை எட்டி உதைக்க அனுமதிக்கமாட்டேன் என்று தெரிவித்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ஒட்டியுள்ள போஸ்டர்களில் நரேந்திர மோடியின் தலையை எட்டி உதைப்பது போன்ற படம் வெளியாகி இருந்தது. அதனை சுட்டிக்காட்டியே மோடி தனது தேர்தல் பிரசாரத்தில் பேசினார்.
இதற்கிடையே திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சிஷிர் அதிகாரியும் பாஜகவில் தன்னை சேர்த்துகொண்டார். ஏற்கனவே அவரது மகன் சுவந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜகவில் சேர்ந்து நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.