கறுப்புப் பணம் வைத்திருப்பதால் தான் ஐ.டி ரெய்டு நடைபெறுகிறது என்று பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்தார். திருப்பூரில் நடைபெற்று வரும் சோதனை தொடர்பாக காரைக்குடியில் பேசிய சி.டி.ரவி “ கறுப்புப்பணம் யார் வைத்திருந்தாலும், அவர்கள் வீட்டிலும் ஐ.டி.ரெய்டு நடக்கும்” என தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் திமுக நகர செயலாளர் தனசேகர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. அதேபோல், தாராபுரம் மதிமுக மாவட்ட துணைச் செயலாளர் கவின் நாகராஜ் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையில் ஒருசில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாராபுரம் தொகுதியில் பாஜக சார்பில் எல்.முருகன் போட்டியிடும் நிலையில் திமுக, மதிமுக நிர்வாகிகள் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. தாராபுரம் தொடுதியில் எல்.முருகனை எதிர்த்து திமுக சார்பில் கயல்விழி செல்வராஜ் போட்டியிடுகிறார்.
இதுபோல பாஜக வேட்பாளர் வானதி போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் சந்திரசேகரின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது.