மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதன் பின்னணி என்ன? யாருக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து கட்சியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை காணலாம்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முதன்முறையாக சட்டமன்றத் தேர்தலில் களம்காண்கிறார். அவர் போட்டியிட தேர்வு செய்துள்ள தொகுதி கோவை தெற்கு. கமல் போட்டியிட மயிலாப்பூர், வேளச்சேரி, ஆலந்தூர், கோவை தெற்கு என நான்கு தொகுதிகள் பரிசீலனை செய்யப்பட்டன. நாடாளுமன்றத் தேர்தலில் மநீம வேட்பாளருக்கு கோவையில் கிடைத்த வாக்குகள், ஆரம்பக் காலத்தில் இருந்தே தன் நற்பணி இயக்கத்தின் பலம் போன்ற காரணங்களால் கோவை தெற்கு தொகுதியை அவர் தேர்வு செய்துள்ளார். மேலும், அதிமுக – திமுக வேட்பாளர்கள் நேரடியாக அந்த தொகுதியில் களம் காணாததும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
அடுத்ததாக டாக்டர். மகேந்திரன். சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் இவர் மருத்துவராக பணியாற்றினாலும், விவசாயம் உள்ளிட்ட இதர தொழில்களிலும் உள்ளார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில், கோவை தொகுதியில் போட்டியிட்டு மநீம வேட்பாளர்களில் அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளரானார்.
மறைந்த குடியரசு தலைவர் அப்துல்கலாமின் ஆலோசகராக பணியாற்றிய பொன்ராஜ் அண்ணாநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். கலாம் மறைவிற்குப் பிறகு அப்துல்கலாம் விஷன் பார்ட்டியை தொடங்கினார். பின்னர், மநீமவில் தனது கட்சியையும் இணைந்து கொண்ட அவருக்கு துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
வேளச்சேரி தொகுதியில் போட்டியிடும் டாக்டர். சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ்.1995ம் ஆண்டில் ஐஏஎஸ் தேர்வில் வென்றவர். சிவகங்கை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், முதலமைச்சரின் சிறப்பு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு உயர் பொறுப்புகளில் பணியாற்றினார். தொழில்நுட்பத் துறையில் செயலாளராக பணியாற்றியபோது பாரத் நெட் ஏலம் சர்ச்சையை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து, பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற சந்தோஷ் பாபு, மநீமவில் இணைந்தார். பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில், மநீமவுக்கு டார்ச் லைட் சின்னம் மறுக்கப்பட்ட போது சட்டரீதியாக அதனை மீண்டும் பெறும் நடவடிக்கைகள் இவர் தலைமையிலேயே மேற்கொள்ளப்பட்டன.
திருவெறும்பூரில் களம் காணும் முருகானந்தம் EXCEL Group of Companies எனும் பெயரில் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். மநீம தொடங்கியது முதல் பொதுச் செயலாளராக உள்ளார். பிறந்தது முதல் திருவெறும்பூர் தொகுதியில் வசித்து வரும் முருகானந்தம், ரோட்டரி கிளப் உள்ளிட்ட பல சேவை அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளை வகித்து வருகிறார்.
தியாகராய நகரில் போட்டியிடும் பழ. கருப்பையா தேர்தலுக்கு புதிதானவர் அல்ல. ஏற்கனவே 2011-ல் துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். திராவிடக் கட்சிகள் கொள்கை ரீதியாக தற்போது இல்லை என விமர்சிக்கும் அவர், கட்சியில் இணைந்தபோதே தேர்தலிலும் போட்டியிடுவார் என கமல்ஹாசன் அறிவித்தார். அதன்படி அவருக்கு தியாகராய நகர் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகை ஸ்ரீப்ரியா. 61 வயதாகும் இவர் தலைமை கழக உறுப்பினராக உள்ளார். 15 வயது முதலே நடித்து வரும் ஸ்ரீப்ரியாவுக்கு மயிலாப்பூர் தொகுதியே பிறந்த வளர்ந்த இடம். அதனால், அந்தத் தொகுதியை கேட்டுப் பெற்றிருக்கிறார். இளைஞரணி மாநிலச் செயலாளரான பாடலாசிரியர் சிநேகன் தஞ்சாவூர் மாவட்டத்தை புதுக்கரியப்பட்டியை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட உள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் பேச்சாளராக உள்ள சிநேகன், 2019-ல் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.
25 வயதான பத்மபிரியா சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு சட்டம் குறித்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதோடு, பல்வேறு விமர்சனங்களும் கிளம்ப கமல்ஹாசன் அவரை நேரில் அழைத்துப் பாராட்டினார். அந்த நேரத்தில் மநீமவில் இணைந்த அவருக்கு, சுற்று சூழல் அணியில் மாநிலச் செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது. மதுரவாயலை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு அந்தத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
29 வயதான சிநேகா மோகன்தாஸ் – மாதர் படை மாநிலச் செயலாளராக உள்ளார். Food Bank எனும் சமூக சேவை அமைப்பை ஏழு ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இவரது சேவையை பாராட்டும் வகையில், 2020 மகளிர் தினத்தன்று பிரதம் நரேந்திர மோடியின் டிவிட்டர் பக்கத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. சைதாப்பேட்டை தொகுதியை சேர்ந்தவர் என்பதால் அத்தொகுதியையே கேட்டு பெற்றுள்ளார்.