முகம் நிறைய சிரிப்புடனும் புது வீடு என்கிற கேப்ஷனுடனும், முகநூலில் தன்னுடைய புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார் கெளசல்யா கார்த்திகா. இவர் தமிழ் தொலைக்காட்சி ஒன்றின் கேம்ஷோவில் ஒரு கோடி ரூபாய் வென்றவர். கூடுதல் சிறப்பாக ‘ஹூ வான்ட்ஸ் டு பி எ மில்லியனர்’ போட்டிகளில் வென்ற முதல் பெண் மாற்றுத்திறனாளி என்ற வரலாற்றை உருவாக்கியவர், மதுரையைச் சேர்ந்த இந்த கெளசல்யா கார்த்திகாதான்.
கெளசல்யா கார்த்திகாவுக்கு செவித்திறன் சவாலும் பேச்சுத்திறன் சவாலும் இருப்பதால், புது வீடு தொடர்பான கெளசல்யாவின் மகிழ்ச்சியை அவரின் கணவர் பாலமுருகன் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.
”கெளசல்யா கோடீஸ்வரி நிகழ்ச்சியில வெல்லும்போது, இந்தப் பணத்தை வெச்சு என்னென்ன செய்யணும்னு ஆசைப் படுறீங்கன்னு கேட்டாங்க. அப்போ, ‘நான் படிச்ச சிறப்புப் பள்ளிக்கு உதவி செய்யணும், வீடு வாங்கணும், ஸ்விட்சர்லாந்து போகணும்’னு கெளசல்யா சொல்லியிருந்தாங்க. மொத விஷயத்தை உடனே செஞ்சுட்டாங்க. அடுத்தது வீடு வாங்கணும்னு தேட ஆரம்பிச்சபோது கொரோனா, லாக்டெளன்னு உலகமே ஸ்தம்பிச்சுப் போச்சு. அதெல்லாம் ஓரளவுக்கு கன்ட்ரோலுக்கு வந்தவுடனே வீடு தேட ஆரம்பிச்சோம். நாங்க ரெண்டு பேருமே வேலைக்குப் போறோம்கிறதால கெளசல்யாவோட அம்மாதான் எங்க பையனைப் பார்த்துக்கிறாங்க. அதனால, அவங்க வீடு இருந்த கேட்டடு கம்யூனிட்டியிலேயே நாங்களும் வீடு வாங்கிட்டோம். கட்டி பத்து வருஷமான பழைய வீடுதான். இதுல கெளசல்யாவுக்கு கொஞ்சம் வருத்தம்தான். அதனால, என்னோட சேமிப்பையெல்லாம் செலவழிச்சு வீட்டோட இன்டீரியர் மொத்தத்தையும் மாத்திட்டேன். இப்போ பார்த்தா அது பழைய வீடு மாதிரியே இருக்காது. வீட்டோட லுக்கை மாத்தினதுக்கப்புறம் அவங்க முகத்துல சந்தோஷமே வந்துச்சு” என்றவரிடம், கெளசல்யாவின் மூன்றாவது ஆசை எப்போது நிறைவேறும் என்றோம்.
Also Read: `அவர்கள் பேசியது கேட்டு அதிர்ந்து போனேன்!’ – மேகன் – ஹாரி தம்பதி பகிர்ந்த அரண்மனை அதிர்ச்சிகள்
”கொரோனா பயத்துல இருந்து மீண்டு உலகம் நிம்மதியாகட்டும். ஸ்விட்சர்லாந்து போற ஆசையெல்லாம் அதுக்கப்புறம் பார்த்துக்கலாம்னு கெளசல்யா சொல்லிட்டாங்க” என்கிறார் பாலமுருகன்.