“ஒருத்தங்க பொது வாழ்க்கைக்கு வந்துட்டாலே அவங்க எவ்வளவுதான் நல்லவங்களா இருந்தாலும் அவங்க மீதான மதிப்பீடுகள்ங்கிறது பெரும்பாலும் தப்பாத்தான் இருக்கு. அதுல ஆண்களைவிட பெண்கள் ரொம்ப அதிகமா பாதிக்கப்படுறாங்க. நானும் பெரியளவில் பாதிக்கப்பட்டிருக்கேன். பலமுறை கண்ணீர்விட்டு அழுதுருக்கேன்.” – பெண்களை இந்தச் சமூகம் மதிப்பீடுகளால் நசுக்குவது குறித்து கேட்டதும், சட்டென வெடிக்கிறார் பாடகி ராஜலட்சுமி செந்தில்.

“எனக்கு முன்னாடி எங்க குடும்பத்திலிருந்து பெண்கள் யாருமே கலைத் துறைக்கு வந்ததில்லை. நான்தான் முதல் ஆள். ஆரம்பத்துல கிராமங்கள்ல இரவு கச்சேரிகளுக்கு ஊர் ஊரா போவோம். `நைட்டு போயிட்டு காலையிலதான் வர்றாங்க… எங்க போறாங்கன்னே தெரியலை’ன்னு ஊருக்குள்ள ஒருமாதிரியா பேசிப்பாங்க. அவங்க நம்மளை பார்க்கிற விதமே வேறமாதிரி இருக்கும்.

ராஜலட்சுமி – செந்தில் கணேஷ்

எனக்கு கச்சேரி இருந்தா என் அப்பா வேலைக்கே போகமாட்டார். காரணம், பொண்ணை தனியா அனுப்பிட்டோம்னா இன்னும் ரொம்ப தப்பா பேசுவாங்கன்றதுதான். நான் எங்கே கச்சேரிக்குப் போனாலும் என் அப்பாவும் என்கூடவே வருவார். அப்படியும் பிரச்னை ஓயாது. சக கலைஞர்கள் யார்கிட்டயாவது நான் சிரிச்சுப் பேசிட்டா போதும், உடனே அவங்ககூட சேர்த்து வெச்சு கதை கட்டிவிட்ருவாங்க. ஆனா, உண்மையில அந்தக் கலைஞரோட பேர்கூட எனக்குத் தெரியாம இருக்கும். ஒரு கட்டத்துக்குமேல இப்படியான சர்ச்சைகளையெல்லாம் தவிர்க்கிறதுக்காக படிப்பை ஆயுதமா எடுத்தேன்.

எப்போ கலை நிகழ்ச்சிக்குப் போனாலும் பாடுற நேரத்தைத் தவிர மற்ற எல்லா நேரத்துலயும் ஏதாவதொரு புத்தகத்தைக் கையில வெச்சுருப்பேன். யாராவது பேச வந்தா, நல்லா இருக்கீங்களான்னு விசாரிச்சுட்டு, நான் புத்தகம் படிக்க ஆரம்பிச்சுடுவேன். சமூகத்தோட தப்பான மதிப்பீடுகளுக்கு பயந்தே நான் பெருசா யார்கூடவும் மிங்கிள் ஆக மாட்டேன். அதே நேரத்துல யார்கூடவும் சண்டையும் போட்டுக்க மாட்டேன். நான் மட்டுமில்லை கலைத்துறைக்கு வர்ற ஒவ்வொரு பெண்ணுமே இதுமாதிரியான விஷயங்களையெல்லாம் கடந்துதான் வந்தாகணும்” எனும்போது ராஜலெட்சுமியின் குரலில் இந்தச் சமூகத்தின் மீதான கோபம் தெறிக்கிறது.

“இதையெல்லாம் தாண்டி சூப்பர் சிங்கர் மாதிரியான பிரமாண்டமான மேடையில் ஏறின பிறகு, வேற மாதிரியான அனுபவம். உண்மையைச் சொல்லணும்னா சோஷியல் மீடியாக்கள்ல கமென்ட்ஸ்ல இவ்வளவு திட்டுவாங்கன்னெல்லாம் எனக்கு ஆரம்பத்துல தெரியாது. ஏதாவது தப்பு பண்ணாதான் திட்டுவாங்கன்னு நினைச்சுகிட்டிருந்தேன். நான் சூப்பர் சிங்கருக்கு வந்து 20 எபிசோடுகளுக்கு அப்புறம் பார்க்கும்போது, நான் பேசறதை, நான் சிரிக்கிறதை, என்னோட மேனரிஸைத்தை என எல்லாத்தையுமே கமென்ட் பண்ண ஆரம்பிச்சாங்க.

செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி

எல்லாத்துக்கும் மேல `இது ஓவரா சீன் போடுது, இது ஓவரா பல்லைக் காட்டுது’ அப்படி இப்படின்னு ஏகப்பட்ட கமென்ட்ஸ். அந்த நேரத்துல அதையெல்லாம் பார்த்து நான் பயங்கரமா அழுதேன். இந்த ஃபீல்டுக்கு வந்ததே தப்பு போலன்னு நினைக்கிற அளவுக்கு அந்த கமென்ட்ஸ் அழுத்தத்தைக் கொடுத்துச்சு. நம்மைப் பத்தி எதுவுமே தெரியாம ஏன் இப்படித் தப்பா ஜட்ஜ் பண்றாங்கன்னு யோசிச்சேன். எனக்கு ஒரு பழக்கம் உண்டு. நான் பாட்டு பாடும்போது அதை நடிச்சுகிட்டே பாடுவேன்.

உதாரணத்துக்கு, `கோவக்கார மச்சான்’னு பாடுறேன்னா என் முகத்துல கோபத்தை வெளிப்படுத்துவேன். இப்படி அந்தப் பாடல் வரிகளுக்கு ஏத்த உணர்வுகளை என் முகத்துல வெளிப்படுத்துவேன். இப்போ இல்லை. நான் எப்போ பன்டுறதுக்கு வந்தேனோ அப்போதிலிருந்தே நான் அப்படித்தான். ஆனா, இப்படியான கமென்ட் பண்றவங்க இதுக்கு முன்னாடி என்னைப்போல நடிச்சுகிட்டே பாடுற பாடகிகளைப் பார்க்கலை. பாடகின்னா ஒண்ணு ஆடாம அசையாம நின்னு பாடுவாங்க… இல்லேன்னா லேசா டான்ஸ் ஆடிகிட்டே பாடுவாங்கன்றதுதான் அவங்க மைண்ட்ல ரெஜிஸ்டர் ஆகியிருக்கு.

இப்படியான சூழல்ல, நான் பண்றது அவங்களுக்கு ஓவர் ஆக்‌ஷனாவோ, ஓவர் சீன் போடுறதாவோ தெரியுதுன்னு எனக்குப் புரிஞ்சது. அதேநேரம், அவங்களுக்கு அப்படித் தோனினா அது என் தப்பு இல்லைன்னும் நான் உறுதியா நம்பினேன். ஏன்னா அப்படிப் பாடுறதுதான் என்னோட இயல்பு. அதைத்தான் என்னுடைய அடையாளமா நான் பாக்குறேன்.

இன்னொரு விஷயத்தை வெச்சும் நான் சீன் போடுறதா என்னை தப்பா ஜட்ஜ் பண்ணாங்க. சூப்பர் சிங்கர் வரும்போது நான் கண்டாங்கிப் புடவைதான் கட்டுவேன். எந்திரன் படப் பாட்டுக்கு ஆடணும்ங்கிறபோது மாடர்ன் டிரஸ் போட வேண்டிய சூழல். அந்தப் பாட்டுக்கு நான் கண்டாங்கிப் புடவை கட்டி ஆட முடியாது.

அப்படியான சூழல்லயும், எனக்கு ஸ்லீவ்லெஸ் குடுத்துராதீங்க. நல்ல கவர்டான டிரஸ்ஸா குடுங்கன்னு நான் ஒருசில கரெக்‌ஷன்ஸ் சொன்னேன். அவ்வளவுதான் என்னால முடியுமே தவிர, எந்திரன் பாட்டுக்கும் நான் கண்டாங்கிப் புடவைதான் கட்டிகிட்டு ஆடுவேன்னு சொல்ல முடியாது. அப்படிச் சொல்லணும்னு கட்டாயமும் இல்லை. ஏன்னா வித்தியாசமான வாய்ப்பு வரும்போது நாகரிகமா ஒரு டிரஸ்ஸைப் போட்டுகிட்டு ஆடுறதுல என்ன தப்பு? அதைவெச்சு, `வரும்போது எப்படி வந்தாங்க… இப்போ எப்படியெல்லாம் மாறிட்டாங்க’ன்னு விமர்சனம் பண்ணாங்க.

செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி

அதுக்குப் பிறகுதான், இங்கே நல்லது செஞ்சாலும் கெட்டது செஞ்சாலும் பேசறவங்க பேசிகிட்டேதான் இருப்பாங்க. அவங்களுடைய நோக்கமே நம்மள நோகடிக்கணும்ங்கிறதுதான். என்னைக்குமே அதுக்கு இடம் கொடுத்திரக் கூடாதுன்னு முடிவெடுத்தேன். ஒரு பெண் கலைத்துறையில தடம் பதிக்கும்போது, அவங்களோட கேரக்டரை, பிஹேவியரை, டிரஸ்ஸிங்கை எல்லாத்தையும் கண்டிப்பா கமென்ட் பண்ணுவாங்க. அதையெல்லாம் தாண்டித்தான் வந்தாகணும்னு என்னை நான் போல்டா மாத்திக்கிட்டேன். இப்போ எந்த விமர்சனத்தையும் நான் கண்டுக்கிறதில்லை. ஆனா, எல்லா பெண்களும் இப்படியான விமர்சனங்களைக் கடந்துதான் வரணும்ங்கிற சமூகச் சூழல் எவ்வளவு மோசமானது” என்று முகத்தில் அறைந்ததுபோல் முடிக்கிறார் ராஜலட்சுமி.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.