அதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் என நம்புவதாக தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. அதிமுக, பாமக உடனான கூட்டணியை உறுதிப்படுத்தி 23 சீட்டுகளை வழங்கியுள்ளது. இதர கூட்டணி கட்சிகளான தேமுதிக மற்றும் பாஜக உடனான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை நீடிக்கிறது.
இந்நிலையில், இந்த இழுபறி நிலைக்கு விளக்கம் அளிக்கும் வகையில், சென்னை கோயம்பேடு அலுவலகத்தில் செய்தியாளர்களை தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி சந்தித்தார்.
அவர் கூறும்போது, “நாங்கள் எதிர்பார்க்கும் தொகுதிகளை அதிமுக ஒதுக்கீடு செய்யும் என்று எதிர்பார்க்கிறோம். நாங்கள் மாநிலங்களவை எம்.பி சீட் கேட்டோம். அதிமுகவும் தர ஒப்புக்கொண்டுள்ளது. 25 தொகுதிகளாவது தரவேண்டும் என அதிமுகவிடம் வலியுறுத்தியுள்ளோம். தேமுதிக கேட்கும் தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டால் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம். அதிமுகவை தவிர வேறு யாருடனும் தேமுதிக பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. அதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் என நம்புகிறோம்.
இதனிடையே, அதிமுக நிர்வாகி புகழேந்தி கூறும்போது, “தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் நல்ல முறையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. கூட்டணியில் எந்தப் பிளவும் இல்லை, நிச்சயம் நல்ல முடிவு எட்டப்படும்” என்றார்.