சசிகலா அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கும் சூழலில், அமமுகவினரை உற்சாகமாகத் தேர்தலை சந்திக்க வைக்கவும், குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்துடன், கணிசமான இடங்களில் வெற்றிபெற வைப்பதற்காகவும் மூன்று முக்கிய வியூகங்களை வகுத்துள்ளார் தினகரன்.

சிறையிலிருந்து வெளிவந்த பிறகு பெரும் பிரளயங்களை உருவாக்குவார் என்று பலரும் ஆரூடம் சொல்லிக்கொண்டிருந்த சூழலில், யாருமே எதிர்பார்க்காதவகையில் அரசியலை விட்டு ஒதுங்கியிருக்கப்போகிறேன் என்று அறிவித்தார் சசிகலா. அவரின் இந்த அறிவிப்பினை அதிமுகவும், பாஜகவும் வரவேற்றுள்ள சூழலில், தினகரன் அடுத்தகட்டமாக என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.

image

பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் உள்ளிட்ட சிலரும், அதிமுகவை சேர்ந்த சிலரும், சசிகலாவைப் போலவே தினகரனும் அரசியலை விட்டு விலகியிருக்கவேண்டும் என்று வெளிப்படையாகவே சொல்கிறார்கள். ஆனால், கட்சியில் விருப்பமனுக்களை பெற்றுக்கொண்டு சுறுசுறுப்பாக, அடுத்தகட்ட தேர்தல் பணிகளை திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார் தினகரன். சசிகலா அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொள்ளும் முடிவை எடுத்த அன்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன், சசிகலாவின் முடிவு தனக்கு ஏமாற்றமளிப்பதாக சொல்லியிருந்தார். சசிகலாவின் இந்த திடீர் முடிவால் அமமுகவினர் சோர்வில் உள்ளதையும் பார்க்க முடிகிறது.

அமமுகவினரை உற்சாகமாக தேர்தலை சந்திக்க வைக்கவும், குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்துடன், கணிசமான இடங்களில் வெற்றிபெற வைப்பதற்காகவும் மூன்று முக்கிய வியூகங்களை வகுத்துள்ளார் தினகரன் என்று அவரது கட்சி வட்டாரங்கள் தகவல் பகிர்ந்தனர்.

       1.வலுவான கூட்டணி:

நொடிக்கு நொடி மாறும் அரசியல் சூழலில், தினகரன் எல்லா பக்கமும் காய்களை நகர்த்திக்கொண்டிருக்கிறார். சசிகலாவை பிரதானமாக வைத்து தேர்தல் பிரசாரத்தை திட்டமிட்டிருந்த அவர், தற்போது பலமான கூட்டணியை அமைக்கும் முனைப்பில் இருக்கிறார். அதனால் அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் அதிருப்தியில் இருக்கும் கட்சிகளுடன் தனித்தனியாக நம்பகமான நபர்கள் மூலமாக பேசி வருகிறார். பிரதான கட்சிகளில் ஏதேனும் ஒரு கட்சியை தன்பக்கம் இழுத்தால் கூட, சில சிறிய கட்சிகளை வைத்துக்கொண்டு ஓரளவுக்கு பலமான அணியை அமைத்துவிடலாம் என்ற கணக்குடன் இருக்கிறார். சில முக்கியமான கட்சிகள் தினகரனுடன் சென்றுவிடலாமா என்ற தீவிர ஆலோசனையில் இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

  1. தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி:

ஒருவேளை எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டால், சில சிறிய கட்சிகள் மற்றும் அமைப்புகளை இணைத்துக்கொண்டு தனித்தே அனைத்து தொகுதிகளிலும் களம் காணவும் ஆயத்தமாகவே உள்ளார். மார்ச் 3 ஆம் தேதி முதல் விருப்பமனுக்களை பெற்றுவரும் அமமுக தலைமையகத்தில், உற்சாகமாக மனுத்தாக்கல் நடந்து வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து களம் கண்ட அமமுக 5.16 % வாக்குகளை பெற்றது, அந்த தேர்தலில் 21 தொகுதிகளில் அமமுகதான் மூன்றாவது இடம் பெற்றது. தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் என்பதால் நிச்சயமாக சில தொகுதிகளை வெல்லலாம் என்பது அவரின் கணக்கு

image

  1. துல்லியத் தாக்குதல் :

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதே ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, விருதுநகர் ஆகிய நான்கு தொகுதிகளில் 10 முதல் 14 சதவீத வாக்குகளை அமமுக பெற்றது. அதுபோல தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் வாக்குகளை இக்கட்சி வாங்கியது. இந்த நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ள 60 முதல் 100 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அமமுக பலமாக உள்ளது. அந்த தொகுதிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொகுதிகளுக்கு ஏற்கெனவே வேட்பாளர்கள் இறுதிசெய்யப்பட்டு கடந்த சில மாதங்களாகவே அவர்கள் தேர்தல் அடிப்படை கட்டமைப்பு பணிகளை செய்து வருகின்றனர் என அமமுக முக்கிய தலைவர்கள் சொல்கிறார்கள். இந்தத் தொகுதிகளில் மட்டும் துல்லியமாக திட்டமிட்டு, அனைத்து வகையிலும் கவனித்து இரட்டை இலக்கத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்களை வெல்லவேண்டும் என்று சுறுசுறுப்பாக பணியாற்றுகிறார்கள் அமமுகவினர். இந்தத் தொகுதிகளில் குக்கர் சின்னத்தை பிரபலப்படுத்தும் வேலையையும் செய்து வருகிறார்கள்.

மூன்று வியூகங்களில் எதாவது ஒன்று கைகொடுக்குமா அல்லது பேரலையில் காணாமல் போகும் சூழல் ஏற்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.