அதிமுக – பாஜக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாவது மேலும் தாமதமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தொகுதி பங்கீடு குறித்து முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டு தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், பாஜக-வுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் குறித்த பேச்சுவார்த்தை நிறைவடைந்தது. அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரான முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் தொகுதி பங்கீடு குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் கிசன் ரெட்டி, இணை பொறுப்பாளர் வி.கே.சிங், தமிழக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர், காலை அவரவர் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தாமதம் ஏற்படும் என கூறப்படுகிறது. இதனிடையே, தொகுதி பங்கீடு குறித்த முழுத் தகவல் இன்னும் 2 நாட்களில் தெரியவரும் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.