சிஎஸ்கே என்றாலே அதிரடியும் ஆச்சரியமும் கொண்ட அணியாக எப்போதும் ஐபிஎல் வரலாற்றில் இருந்து வருகிறது. போட்டிகளில் மட்டுமல்லாமல் ஐபிஎல் ஏலத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அணியாக சிஎஸ்கே இருந்திருக்கிறது என்றால் மிகையல்ல. அதேபோல இந்தாண்டு ஐபிஎல்லிலும் பலரது புருவங்களை உயர்த்தும் வகையில் சில முடிவுகளை எடுத்தது சிஎஸ்கே. ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்தின் மொயின் அலியை ரூ.7 கோடிக்கும், கிருஷ்ணப்ப கவுதமை ரூ.9.25 கோடிக்கு ஏலம் எடுத்து அதிர வைத்தது சிஎஸ்கே.

image

இந்த முடிவுகள் கூட பரவாயில்லை. ஆனால் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் தூணாக கருதப்படும் செடேஷ்வர் புஜாராவை ரூ.50 லட்சத்துக்கு ஏலம் எடுத்து அனைவரைின் புருவத்தையும் உயர்த்தியுள்ளது சிஎஸ்கே. ஒரு டெஸ்ட் பேட்ஸ்மேனான புஜாரா எப்படி டி20 பார்மெட்டுக்கு செட் ஆவார் என சென்னை ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அவர்கள் அதிர்ச்சிக்கான காரணமும் இல்லாமல் இல்லைதான்.

image

ஐபிஎல் தொடரில் ஏற்கெனவே கொல்கத்தா, பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்காக கடந்த 2008 முதல் 2014 வரை புஜாரா விளையாடியுள்ளார். அதன் மூலம் மொத்தம் 30 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 390 ரன்களை அவர் குவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் புஜாராவின் ஸ்ட்ரைக் ரேட் 99.74. சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை அணி மூலமாக ஐபிஎல் களத்திற்கு புஜாரா கம்பேக் கொடுத்துள்ளார்.

image

ஏன் புஜாரா டி20யில் விளையாடக் கூடாதா?

புஜாரா ஒரு முழுமையான பேட்ஸ்மேன். அவரால் கிரிக்கெட்டின் அனைத்து ஷாட்டுகளை விளையாட முடியும். ஆனால் என்னவோ புஜாரா டெஸ்ட் போட்டிக்குதான் செட் ஆவார் என பிசிசிஐ எப்போதோ முடிவு செய்துவிட்டது. இந்தியாவின் சுவர் ராகுல் டிராவிட் ஓய்வுப்பெற்ற பின்பு அவரின் இடத்தில் விக்கெட்டுகளை இழக்காமல் நிலைத்து நின்று ஆடக்கூடிய பேட்ஸ்மேனை தேடிக்கொண்டிருந்த நிலையில் அப்போது அணிக்குள் வந்தவர்தான் புஜாரா. அப்படி இந்திய டெஸ்ட் அணியின் 3ஆவது பேட்ஸ்மேனாக நங்கூரம் போட்டு தன்னுடைய டெஸ்ட் இடத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டார்.

image

அப்போதிருந்தே புஜாரா டெஸ்ட் கிரிக்கெட்டுக்குதான் செட் ஆவார் என்ற மனநிலைக்கு ரசிகர்களும் வந்துவிட்டனர். இந்தியாவுக்காக மொத்தம் 5 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதுவும் கடைசியாக அவர் 2014 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக விளையாடி இருக்கிறார். அதன் பின்பு ஒருநாள் போட்டிகளில் புஜாராவுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அதனால் தன்னுடைய திறமையையை அவரால் நிரூபிக்க முடியவில்லை என்றும் சொல்லலாம்.

image

புஜாரா பந்துகளை சகட்டுமேனிக்கு தூக்கி அடிக்கும் வீரரல்ல, ஆனால் அவரால் தன்னுடைய நேர்த்தியான ஷாட்டுகள் மூலம் “கேப்புகளில்” பந்துகளை விரட்டி பவுண்டரிகளை எடுக்க முடியும். அதேபோல அவரால் சிக்ஸர்களையும் விளாச முடியும். கடந்த ஆண்டு ஒரு பேட்டியில் புஜாரா “எதனை வைத்து என்னால் டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாட முடியும் டி20களில் விளையாட முடியாது என்ற முடிவுக்கு வந்தார்கள் என தெரியவில்லை. ஐபிஎல் அணிகள் எதனை வைத்து என்னை தேர்வு செய்யவில்லை. இது சங்கடமாக இருக்கிறது” என தெரிவித்திருந்தார்.

image

ஐபிஎல் தொடர்பாக அண்மையில் பேசிய புஜாரா “ஐபிஎல் போட்டிகளில் ஓர் அங்கமாக இருக்க விரும்புகிறேன். எனக்கு விளையாட வாய்ப்பளித்தால் நிச்சயம் சிறப்பாக செயல்படுவேன்” என்றார். புஜாரா அத்தனை உறுதியுடன் தெரிவித்த வார்த்தைகள் சிஎஸ்கே நிர்வாகத்தை நிச்சயம் கவர்ந்திருக்கும் என்றே தோன்றுகிறது.

இது குறித்து பேசியுள்ள சிஎஸ்கே பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி “ஆஸ்திரேலியாவில் புஜாரா அபாரமாக விளையாடினார். அவருக்கான அங்கீகாரமாகவும் அவரை கெளரவிக்கும் வகையிலும் ஏலத்தில் எடுத்திருக்கிறோம். அவர் ஒரு உண்மையான வீரர் தன்னுடைய வியர்வையையும் ரத்ததையும் நாட்டுக்காக அர்ப்பணித்தவர். அவருக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

ராகுல் டிராவிட் டெஸ்ட் வீரர் என அறியப்பட்டாலும் அவர் இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளிலும் தவிர்க்க முடியாத வீரராக இருந்தார். அதேபோல டிராவிடுக்கு மாற்றாக வந்த புஜாராவால் ஏன் டி20 போட்டியில் சாதிக்க முடியாது? சிஎஸ்கே அவருக்கு விளையாட வாய்ப்பளித்தால் நிச்சயம் புஜாரா சாதிப்பார் என்பதே உண்மை.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.