நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் தந்தை மகன் உள்ளிட்ட மூன்று நபர்களை காட்டு யானை ஒன்று தாக்கிக் கொன்றது. உள்ளூர் மக்களால் உடைந்த கொம்பன், ஷங்கர் ஆகிய பெயர்களில் அழைக்கப்பட்டு வந்த இந்த ஆண் காட்டுயானையே இவர்களை தாக்கியுள்ளது என்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர்.
மேலும் இந்த யானை மனிதர்களை தாக்கும் சுபாவம் கொண்டதாக அறிவித்து, யானையைப் பிடிக்கும் முயற்சியில் கடந்த டிசம்பர் மாதத்தில் களமிறங்கினர்.
இரண்டு மாதங்களாக போக்கு காட்டி வந்த யானையை, மிகுந்த சவால்களை எதிர்கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை மதியம் சேரம்பாடி வனப்பகுதியில், துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
பிடிபட்ட காட்டுயானையை முதுமலையில் உள்ள அபயரண்யம் வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு வந்தனர். காட்டுயானைகளை அடைக்க வழக்கமாக பயன்படுத்தப்படும் க்ரால் எனும் பிரத்யேக மரக்கூண்டில் வெள்ளிக்கிழமை இரவே அடைத்தனர்.
Also Read: நீலகிரி: அரை மயக்கத்திலும் ஆக்ரோஷம் குறையாத `உடைந்த கொம்பன்’ – நள்ளிரவு வரை நீடித்த போராட்டம்!
க்ராலில் சிறைப்பட்டு கிடக்கும் இந்த யானை, க்ராலை விட்டு வெளியேற இடைவிடாது முயன்று வருகிறது. இதனால் 24 மணி நேரமும் இந்த யானையை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த யானை குறித்து நம்மிடம் பேசிய வனத்துறை பணியாளர் ஒருவர், “அரை மயக்கத்துல உள்ள அடைக்கும்போதே ரொம்ப ஆக்ரோஷமா இருந்தான். நம்ம கும்கிகளே இதப்பாத்து மெரண்டுச்சுங்க. மயக்கம் தெளிஞ்சது முதலே வெளிய வரதுக்கு ட்ரை பண்ணிட்டே இருக்கு. க்ரால முட்டி மோதிக்கிட்டு இருக்கு. தண்ணிய பக்கத்துல வச்சிருக்கோம். பசுந்தழைகளையும் கொடுக்குறோம். இன்னும் ஆக்ரோஷம் குறையாம இருக்கு. க்ரால் பலவீனமாகாம பாத்து, 24 மணி நேரமும் கண்காணிச்சிட்டு இருக்கோம்”என்றார்.