`நான் தனியா சாகுபடி பண்ணனும், எனக்குரிய நிலத்தைப் பிரிச்சுத் தாங்க’ என்று கேட்ட தம்பியை, சகோதரர்கள் இருவர் கருக்கருவாளால் கழுத்தை அறுத்துக் கொன்ற சம்பவம், கரூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள சேப்ளாப்பட்டி ஊராட்சி, வடக்குமேடு பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. விவசாயக் கூலியாக இருந்து வந்துள்ளார். இவருக்கு, நாகராஜ், சுப்பிரமணி, காத்தான் என்ற சகோதர்களும், புவனேஸ்வரி என்ற சகோதரியும் உள்ளனர். இவர்களது தந்தையான பெருமாள் பெயரில் உள்ள விவசாய நிலத்தை, இவர்களது தாயார் பெரியக்காள் விவசாயம் செய்துவந்தார்.
Also Read: கரூர்: ஆன்லைன் விளையாட்டு விபரீதம்; வீட்டைவிட்டுச் சென்ற பள்ளி மாணவர்! – அதிர்ச்சியில் பெற்றோர்
பாகப்பிரிவினை செய்யப்படாமல் இருந்ததால், அண்ணன், தம்பிகளுக்கு இடையில் நிலத்தகராறு இருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இவர்களது தாயார் பெரியக்காள் 3.50 ஏக்கரில் நெல் விவசாயம் செய்து வந்தார். நெல் அறுவடை நடந்திருக்கிறது. இந்நிலையில், கந்தசாமி தனக்கு நிலம் வேண்டும் என நெல் அறுவடை செய்யும்போது, போய் கேட்டிருக்கிறார். `எனக்கு சொத்தைப் பிரித்துக் கொடுத்து அறுவடை செய்ய வேண்டும்’ என கேட்டதாகச் சொல்கிறார்கள். அப்போது, கந்தசாமியின் சகோதரர்கள் காத்தான், சுப்பிரமணி இருவரும் கந்தசாமியை, அடித்து துவைத்திருக்கிறார்கள்.
அதோடு, ஆத்திரம் தீராமல் காத்தானும், சுப்பிரமணியும் சேர்ந்து கந்தசாமியின் கழுத்தை கருக்கு அரிவாளால் அறுத்து, படுகொலை செய்தனர். இந்தக் கொலை சம்பவம் குறித்து அறிந்த, குளித்தலை டி.எஸ்.பி சசிதர் தலைமையில், பயிற்சி டி.எஸ்.பி சத்யராஜ், காவல் ஆய்வாளர் உதயகுமார், உதவி ஆய்வாளர் கருணாநிதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கந்தசாமியின் உடலைக் கைப்பற்றிய போலீஸார், குளித்தலை அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்கு அனுப்பினர். இந்தக் கொலை சம்பவம் குறித்து, குளித்தலை காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, தம்பியை வெட்டி படுகொலை செய்த சகோதர்கள் காத்தான், சுப்பிரமணி இருவரையும் கைது செய்தனர். சொத்துப் பிரச்னைக்காக தங்களது தம்பியை சகோதர்கள் கொலை செய்த சம்பவம், குளித்தலைப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.