அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடனின் நிர்வாகக் குழு சார்பில் அந்நாட்டின் மிகமுக்கிய பொறுப்புகளில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க அரசின் நிதியுதவியுடன் இயங்கும் தன்னார்வ சமூக திட்டமான AmeriCorps-இன் திட்ட இயக்குனராக சோனாலி நிஜவாஹனும், வெளியுறவு விவகாரங்களின் புதிய தலைமை அதிகாரியாக ஸ்ரீ பிரஸ்டன் குல்கர்னியும் நியமிக்கப்பட்டுள்ளனர். இருவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள்.
காலநிலை மற்றம், பொருளாதார சரிவை மீட்டெடுக்கும் முயற்சி, கொரோனா வைரஸ் மற்றும் இனவெறி பேதம் என அமெரிக்கா தற்போது சந்தித்து வரும் மிகமுக்கிய நான்கு விஷயங்களில் இவர்கள் இருவரும் கவனம் செலுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அவரவர் சார்ந்த துறையில் வல்லுனர்களாக திகழ்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர்களில் சோனாலி நிஜவாஹன் கல்வி மற்றும் உளவியலில் இளங் கலையும் சமூக சேவையில் முதுகலையும் முடித்துள்ளார். குல்கர்னி 14 ஆண்டுகாலம் வெளிநாடு சேவை அதிகாரியாக பணியாற்றியுள்ளார். இருவரும் அவரவர் தகுதிகளுக்கு ஏற்ற இடத்திலேயே இப்போது பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் பைடனின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.