கொரோனா பாதித்தவர்களை கண்டறிவதற்காக 3 நாய்களுக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளித்துள்ளது.
கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், அனைத்து மக்களையும் நிலைகுலையச் செய்தது. கொரோனா பாதித்தவர்களை கண்டறிய பிசிஆர் டெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ வழிமுறைகள் இருந்தாலும், நாயின் மோப்ப சக்தி மூலம் கண்டறிய முடியுமா என சோதனை நடத்தப்பட்டது. இதற்காக பிரிட்டன், பின்லாந்து, ரஷ்யா, பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், ஜெர்மனி, லெபனான் ஆகிய நாடுகள் சோதனை நடத்தி வருகின்றன.
இதேபோல, இந்திய ராணுவம் ‘கேஸ்பர்’ என்ற காக்கர் ஸ்பேனியல் வகை நாய்க்கும், ஜெயா, மணி என்ற இரு சிப்பிப்பாறை வகை நாய்களுக்கும் பயிற்சி அளித்தது. டெல்லியில் நடைபெற்ற பயிற்சியில் 3 நாய்களும், கொரோனா பாதித்தவர் உடைகளை சரியாக கண்டுபிடித்து ஆச்சரியப்படுத்தின. கொரோனா பாதித்தவரின் வியர்வை மற்றும் சிறுநீர் மூலம் நாய்கள் கொரோனா பாதிப்பை கண்டுப்பிடிப்பது குறிப்பிடத்தக்கது.