சென்னையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நாளை ஒருநாள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் இந்தியா வெற்றிப்பெற மேலும் 381 ரன்கள் தேவைப்படுகிறது.
சென்னையில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 578 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து விளையாடிய இந்தியா, ரிஷப் பன்ட், புஜாரா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது அரை சதத்தால் 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 241 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக பர்ன்ஸ் மற்றும் டோம் சிப்லே களமிறங்கினர். இந்தியத் தரப்பில் அஸ்வின் முதல் ஓவரை வீசினார். இதில் முதல் பந்தை எதிர்கொண்ட் பர்ன்ஸ் ஸ்லிப்பில் பீல்டிங் செய்திருந்த ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பின்பு மற்றொரு தொடக்க வீரரான டோம் சிப்லேவையும் அவுட் செய்தார் அஸ்வின்.
இதனையடுத்து ஜோ ரூட்டும் , லாரண்ஸும் ஜோடி சேர்ந்தனர். இந்தக் கூட்டணி விரைவாக ரன்களை சேர்க்க முயற்சித்தபோது வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவை பந்துவீச அழைத்தார் கேப்டன் விராட் கோலி. இதில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் லாரண்ஸ் அவுட்டானார். இதில் ஜோ ரூட் தொடர்ந்து விளையாடி 40 ரன்கள் எடுத்து வெளியேறினார். பென் ஸ்டோக்ஸ் 7 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து வந்த போப், பட்லர், பெஸ் ஆர்ச்சர் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 178 ரன்களுக்கு இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இதனையடுத்து இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் முன்னிலையுடன் இந்தியா வெற்றிப்பெற 420 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இந்தியா. முதல் இன்னிங்ஸ் போலவே இதிலும் ரோகித் சர்மா 12 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இதனையடுத்து சுப்மன் கில்லும், புஜாராவும் விக்கெட்டை இழக்காமல் விளையாடினர். இதில் ஆட்ட நேர முடிவில் சுப்மன் கில் 15 ரன்களும், புஜாரா 12 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 381 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் நாளை மற்றும் கடைசி நாள் ஆட்டத்தை எதிர்கொள்ள இருக்கிறது இந்தியா.