உழைத்து, தியாகம் செய்து அரசியலில் தாம் முன்னுக்கு வந்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், தூத்துக்குடி பரப்புரையின்போது முதல்வர் பழனிசாமிக்கும் அவர் சவால் விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2-வது நாளாக பரப்புரை மேற்கொண்டுள்ள மு.க.ஸ்டாலின், மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். அப்போது, கூட்டத்திலிருந்த தொண்டர் ஒருவர் ஸ்டாலினுடன் செல்ஃபி எடுக்க முயன்றபோது, அவரது செல்போனை வாங்கி, தானே செல்ஃபி எடுத்துக் கொடுத்தார் ஸ்டாலின்.
பின்னர் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த அவர், மின்கொள்முதல் ஊழல், வாக்கி டாக்கி ஊழல், குட்கா – குவாரி ஊழல் என அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். எமர்ஜென்சியை எதிர்த்ததால் 23 வயதில் சிறைக்கு சென்றதையும், மக்கள் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததையும் ஸ்டாலின் நினைவுகூர்ந்தார். முதல்வர் பழனிசாமி குறித்தும் அவர் விமர்சனங்களை முன் வைத்தார்.