விவசாயிகளுக்கு ஆதரவு Vs. அரசுக்கு ஆதரவு தொடர்பான கருத்துக்கள் தற்போது ட்விட்டரில் சூடுபிடித்து இருக்கிறது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தியபோது வன்முறை வெடித்தது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்து, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சூழலில், சர்வதேச அளவில் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா, சூழலியல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்ட பிரபலங்கள் இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ட்விட்டரில் ஆதரவு தெரிவித்தனர். இவர்களது பதிவுகளால் டெல்லியில் நடைபெறும் போராட்டம் சர்வதேச அளவில் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையடுத்து பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத், ரிஹானாவின் ட்விட்டை குறிப்பிட்டு கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். ‘முட்டாளே அமைதியாக உட்கார். உங்களைப் போல நாட்டை விற்பவர்கள் அல்ல நாங்கள்” என ட்வீட் செய்து சர்ச்சையைக் கிளப்பினார்.
இதைத்தொடர்ந்து சர்வதேச பிரபலங்களின் கவனம் இந்திய விவசாயிகளின் போராட்டம் பக்கம் திரும்பவே, இந்திய வெளியுறவுத்துறையின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ‘பிரபலங்களால் போராட்டம் குறித்து தெரிவிக்கப்படும் கருத்துகள் எதுவும் சரியானவை அல்ல’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வெளிநாட்டு பிரபலங்களின் ஆதரவுக் குரல்கள், அவர்களுக்கெதிரான உள்நாட்டு பிரபலங்களின் கண்டனக் குரல்கள், வெளியுறவுத்துறையின் தடாலடி அறிக்கை ஆகியவை தொடர்பான கருத்துக்கள் தற்போது ட்விட்டரில் சூடுபிடித்து இருக்கிறது.
அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் #IndiaAgainstPropaganda, #IndiaTogether, #IndiaWithModi ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் வரிசையாக இடம்பிடித்துள்ளன. விவசாயிகளுக்கு ஆதரவாக #FarmersProtest என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகியுள்ளது.