தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் மோகன் நாயுடு கிஞ்சரப்பு தனக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலிருந்து 9 நாட்கள் விடுப்பு வேண்டி மக்களவை தலைவர் ஓம் பிர்லாவிடம் கோரிக்கை வைத்துள்ளார். விடுப்புக்காக அவர் வைத்துள்ள காரணம் எல்லோரது மனதையும் கவர்ந்துள்ளது. பொறுப்புள்ள கணவனாகவும், தந்தையாகவும் நான் என் மனைவியுடனும், பிறக்க போகும் குழந்தையுடனும் இருக்கவே விரும்புகிறேன் என்பது தான் விடுப்புக்காக ராம் மோகன் நாயுடு முன்வைத்துள்ள கோரிக்கை.
“பிள்ளை பேற்றில் இருவருக்கும் பங்கிருப்பதால். குழந்தையை பார்த்துக் கொள்வதிலும் சம பங்கு வேண்டும் என்ற நோக்கில் இந்த விடுப்பை எடுத்துள்ளேன். ஜனவரி 29 முதல் பிப்ரவரி 10 வரை விடுப்பு கேட்டுள்ளேன். இதை நான் சொல்ல காரணமும் உண்டு. அவையில் நல்ல வருகை பதிவு கொண்டவன் நான். அதனால் எனது விடுப்புக்கான காரணம் பதிவில் இருப்பது நல்லது என நினைத்ததால் இதை செய்துள்ளேன்” என்கிறார் ஸ்ரீகாகுளம் தொகுதியின் நாடாளுன்ற உறுப்பினரான ராம் மோகன் நாயுடு.
அண்மையில் கோலியும் தனக்கு குழந்தை பிறக்க இருந்ததை காரணம் காட்டி பேறு கால விடுமுறை எடுத்துக் கொண்டார். தற்போது நாடாளுமன்ற உறுப்பினரும் விடுப்பு வேண்டியுள்ளது இந்தியாவில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதாக சொல்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.