இந்தியாவில் கடந்த 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சீரம் இந்தியா நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் இந்தியாவில் செலுத்தப்படுகின்றன. முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், அடுத்தகட்டமாக அரசு பிரநிதிகள் உள்ளிட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டு, அதன்படி கடந்த சில நாட்களாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. 

அமெரிக்காவில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட 10 நாட்கள் ஆனது. பிரிட்டனில் 18 நாட்கள் ஆனது. ஆனால் இந்தியா அந்த எண்ணிக்கையை 6 நாட்களிலேயே தொட்டது. 

பின்தங்கிய தமிழகம்?

நேற்றொரு தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் முடிந்துவிட்டது. இந்த இரண்டு வாரங்களில், 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 35 சதவீத முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள மத்திய சுகாதார அமைச்சகம், ஆறு மாநிலங்களில் இந்த பணிகளில் பின்தங்கியுள்ளதாக கவலை தெரிவித்துள்ளது. இந்த ஆறு மாநிலங்களில் தமிழகமும் இடம்பெற்றுள்ளது. தமிழ்நாடு (15.7 சதவீதம்) மற்ற மாநிலங்களை விட தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

image

இது தொடர்பாக, “ஜார்கண்ட் (14.7 சதவீதம்), டெல்லி (15.7 சதவீதம்), தமிழ்நாடு (15.7 சதவீதம்), உத்தரகண்ட் (17.1 சதவீதம்), சத்தீஸ்கர் (20.6 சதவீதம்), மகாராஷ்டிரா (20.7 சதவீதம்) தடுப்பூசி செயல்திறனை மேம்படுத்த வேண்டும். இந்த மாநிலங்களுடன் நாங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

லட்சத் தீவு (83.4 சதவீதம்), ஒடிசா (50.7 சதவீதம்), ஹரியானா (50 சதவீதம்) போன்ற மூன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசம் அதன் பதிவுசெய்யப்பட்ட சுகாதாரப் பணியாளர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசியை செலுத்தி முடித்துவிட்டன. அதேபோல், அந்தமான் (48.3 சதவீதம்), ராஜஸ்தான் (46.8 சதவீதம்), திரிபுரா (45.6 சதவீதம்), மிசோரம் (40.5 சதவீதம்), தெலுங்கானா (40.3 சதவீதம்)  மாநிலங்கள் 40 சதவீதத்திற்கும் அதிகமாக தடுப்பூசியை செலுத்தி முடித்துவிட்டன. ஆந்திரா (38.1 சதவீதம்), கர்நாடகா (35.6 சதவீதம்) மற்றும் மத்தியப் பிரதேசம் (35.5 சதவீதம்) ஆகிய மூன்று பெரிய மாநிலங்கள், தடுப்பூசியின் முதல் டோஸை அதன் சுகாதாரப் பணியாளர்களில் 35 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு செலுத்தியுள்ளன” என்று மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறினார்.

இதற்கிடையே, கொரோனா வைரஸால் முதல் பாதிப்பு ஏற்பட்டதாக இந்தியா அறிவித்த ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து, கடந்த ஏழு நாட்களில் 146 மாவட்டங்களில் புதிய பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இதுதொடர்பாக பேசிய, சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், “கடந்த 7 நாட்களில் இருந்து 146 மாவட்டங்களுக்கு புதிய பாதிப்புகள் பதிவாகவில்லை. கடந்த 14 நாட்களில் இருந்து 18 மாவட்டங்கள், 21 நாட்களில் இருந்து 6 மாவட்டங்கள் மற்றும் கடந்த 28 நாட்களில் இருந்து 21 மாவட்டங்களில் இருந்து புதிய பாதிப்புகள் பதிவாகவில்லை. மேலும்,  நாட்டில் தற்போது கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று 1.73 லட்சம் பேரில் 0.46 சதவீதம் மட்டுமே வென்டிலேட்டர்களிலும், 2.20 சதவீதம் ஐசியுவிலும், 3.02 சதவீதம் ஆக்ஸிஜன் ஆதரவோடும் உள்ளனர்” என்று கூறி இருக்கிறார்.

image

தமிழகம் என்ன நிலைமை?

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 6,428 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி திட்டத்தின் 13-வது நாளான நேற்று, தமிழகத்தில் கோவிஷீல்டு தடுப்பூசியை 6172 பேர், கோவாக்ஸின் தடுப்பூசியை 256 பேர் போட்டுக்கொண்டனர்.

அதேபோல் நேற்று முன்தினம் வரை தமிழகத்தில் 80 ஆயிரத்து 138 பேருக்கு ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியும், ஆயிரத்து 901 பேருக்கு ‘கோவேக்சின்’ தடுப்பூசியும், ஆக, 82 ஆயிரத்து 39 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

-மலையரசு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.