வாகன காப்பீடு மோசடி வழக்கு தொடர்பாக, அரசு மற்றும் தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கடிதம் அனுப்பியுள்ளது.
போலி வாகன காப்பீடு தயாரித்து மோசடி செய்ததாக நெல்லையைச் சேர்ந்த மாரியப்பன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 133 சவரன் தங்க நகைகள், 3 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்து ஆவணங்கள், ஒன்பதரை லட்சம் ரூபாய் பணம், சொகுசு கார், லேப்டாப், ஸ்மார்ட் ஃபோன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அவற்றை தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பி உள்ள மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், இக்கும்பல் லட்சக்கணக்கில் போலி ஆவணங்களை தயாரித்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இதனால், அரசு மற்றும் தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு காவல்துறை சார்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதில், தங்கள் வாடிக்கையாளரிடம் உள்ள காப்பீடு ஆவணங்கள் அசலானது தானா என்பதை ஆய்வு செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கைதான 6 பேரிடம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள அதிகாரிகள், முக்கிய தகவல்களை சேகரித்து வருகின்றனர்.