முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் காலை 11 மணிக்கு திறக்கப்படவுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினாவில் எம்ஜிஆர் நினைவிடத்துக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது. 80 கோடி ரூபாய் செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் கட்டப்பட்டிருக்கும் இந்த நினைவிடத்தை காலை 11 மணி அளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்கு தொண்டர்களை தனி ரயில் மூலம் சென்னை அழைத்து வந்துள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜு. மதுரை மாநகர் பகுதியைச் சேர்ந்த 1500 அதிமுக தொண்டர்கள் மற்றும் குடும்பத்தினருடன், அமைச்சர் செல்லூர் ராஜுவும் சென்னைக்கு பயணித்துள்ளார். அவர்கள் அனைவரும் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் பங்கேற்ற பின்னர், மாலை 5.30 மணிக்கு மதுரைக்கு திரும்பி செல்லவும் தனி ரயில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாய் மீது கொண்ட பற்றின் காரணமாகவே ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழாவிற்கு வித்தியாசமான முறையில் தனி ரயில் பதிவு செய்ததாக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்கள் மத்தியில் கண் கலங்கினார்.