“என்னுடைய சொந்த ஊருக்கு வாங்க” என சென்னைக்கு இந்தியாவுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களை கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை வரவேற்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அதன் பின்பு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களிலும் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் பிப்ரவரி 5 – 9 ஆம் தேதி வரையிலும், இரண்டாவதுப் போட்டியும் சொன்னையில் பிப்ரவரி 13 – 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் கடைசி இரு டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்தில் நடக்கிறது.
இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்கு கேப்டன் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் சென்னை வந்தடைந்தனர். இவர்கள் சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் தங்க வைக்கப்படுகின்றனர். இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரை முடித்துக்கொண்டு இங்கிலாந்து வீரர்கள் வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கொரோனா விதிமுறையின் கீழ் 6 நாள்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படுவார்கள். பின்பு இவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் மைதானத்தில் பயிற்சியை தொடங்குவார்கள் எனக் கூறப்படுகிறது.
Welcome to my hometown @englandcricket wish was there for the game, should be a great series https://t.co/BNRDOQnnyO
— Sundar Pichai (@sundarpichai) January 27, 2021
இந்நிலையில் இங்கிலாந்து அணி சென்னை வருகை குறித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டது. அதனை பகிர்ந்த சுந்தர் பிச்சை “என்னுடைய சொந்த ஊருக்கு வருகை தந்துள்ள இங்கிலாந்து அணியை வரவேற்கிறேன். இந்த டெஸ்ட் தொடர் சிறப்பானதாக இருக்கும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.