இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் கடந்த வாரம் வாரணாசிக்கு சுற்றுலா நிமித்தமாக சென்றிருந்தார். அங்குள்ள காசி விசுவநாதர் கோயில் மற்றும் கால பைரவர் ஆலயத்திற்கும் சென்று அவர் வழிபட்டார். அதோடு கங்கை நதியில் படகு சவாரியும் சென்றிருந்தார். அப்போது பறவைகளுக்கு உணவு கொடுத்துள்ளார் தவான்.
அதனை தவானுடன் சென்றவர்கள் புகைப்படமாக கேமிராவில் படம் பிடித்துள்ளனர். தொடர்ந்து அந்த படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் தவான். ‘பறவைகளுக்கு உணவு கொடுத்து மகிழ்ந்தேன்’ என அதற்கு அவர் கேப்ஷனும் போட்டுள்ளார். அந்த பதிவுதான் இப்போது அந்த படகை ஓட்டி சென்ற படகோட்டிக்கு சிக்கலை கொடுத்துள்ளது.
View this post on Instagram
இந்தியாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் பறவைகளுக்கு உணவு கொடுக்க வேண்டாம் என படகை இயக்குபவர்களிடம் சொல்லி இருந்தார்களாம்.
அதனையும் மீறி தவான் உணவை கொடுத்திருப்பதால் அந்த படகை ஓட்டி சென்ற படகோட்டி மீது நடவடிக்கை மேற்கொள்ள அரசு திட்டமிட்டு வருகிறதாம். இது தொடர்பாக அந்த படகோட்டிக்கு நோட்டீஸ் அனுப்பவும் அரசு முடிவு செய்துள்ளதாம். அதே நேரத்தில் சுற்றுலா பயணியாக சென்ற தவானுக்கு இந்த விஷயம் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லாததால் அவர் மீது நடவடிக்கை எதுவும் இப்போதைக்கு எடுக்கப்படவில்லை என சொல்லப்பட்டுள்ளது.