’தேர்தல் அறிவிப்பு வந்த பின் கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் முதல்வரிடம் பேசுவோம்’ என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கூறியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடவாசல் கிராமத்தில் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் “தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து பேசுவேன். தொகுதி பங்கீடு பேசுவதற்கு காலம் இருக்கிறது. முதல்வர் தொடர்ந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளதால் முடித்துவிட்டு வந்தபின்பு சந்திப்போம்” என்றவரிடம், மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவரை அவதூறாக பேசியதாக அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்களே என்ற கேள்விக்கு,
“ஆதாரங்கள் இருந்தால் வழக்குப்போடுங்கள். எந்த சமுதாயத்தைப் பற்றியும், தனிநபர் பற்றியும் யார் மனதையும் புண்படும்படி எனது 50 வயது வரை பேசியது கிடையாது. அவர்களாகவே கற்பனை செய்து கொண்டு பேசினால் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது. நான் யார் ஒருவர் மீதும் தனிப்பட்ட தவறான தாக்குதலோ கருத்துகளையோ சொல்லியிருந்தேன் என்று சொன்னால் சட்டப்படி புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கலாம். அதற்கு எல்லா அதிகாரமும் இருக்கிறது.
பொதுவாக ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பில் வரக்கூடிய தகவல்களை புகாராக எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுக்கும் காவல்துறை நிர்வாகம் நான் யாரைப் பற்றியாவது தவறாக பேசி இருந்தால் தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம், அது ஒரு பொய்யான வதந்தி” என்று கூறியுள்ளார்.