அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு தெலுங்கு முன்னணி நடிகர் பவன் கல்யாண் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்திருக்கிறார்.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் தம்பியான பவன் கல்யாண் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர். அவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு சிரஞ்சீவி ’பிரஜா ராஜ்யம்’ கட்சியை ஆரம்பித்தபோது அவருடன் இணைந்து அரசியல் பணிகளை மேற்கொண்டார் பவன் கல்யாண். ஆனால், சிரஞ்சீவி கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸில் இணைந்தபோது, அதில் மாற்றுக்கருத்து ஏற்பட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு ’ஜன சேனா’ என்ற கட்சியை ஏற்படுத்தி முழுநேர அரசியல்வாதியாய் மாறினார்.
அப்போதே பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். சமீபத்தில் நடந்து முடிந்த ஹைதராபாத் நகராட்சி தேர்தலிலும் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது பாஜக. இதற்காக, பல தரப்பினரும் நன்கொடை அளித்து வருகிறார்கள். அதற்கு, தென்னிந்தியாவிலிருந்து முதல் நடிகராக பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை அளித்துள்ளார். அவரது கட்சியில் உள்ள அனைத்து மதத்தினரும் சேர்ந்து இந்த நன்கொடையை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.