மும்பையில் உள்ள மலாட் என்ற இடத்தில் வசிக்கும் ராஜேஷ் நிகம் (23), தனது வீட்டின் அருகே வசித்த வேறு ஒரு சாதிப்பெண்ணை காதலித்து வந்தார். தங்களது காதலை பெற்றோரிடம் சொன்னால், திருமணத்துக்குச் சம்மதிக்க மாட்டார்கள் என்று கருதி தங்களது காதல் குறித்து தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. கொரோனா பரவல் ஊரடங்கின்போது அப்பெண்ணின் பெற்றோர் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர்.
ஆனால், அப்பெண் படித்து வந்ததால் மும்பையிலேயே தங்கிவிட்டார். காதலர்கள் அடிக்கடி சந்தித்ததால் ராஜேஷின் காதலி காதலி கர்ப்பம் அடைந்தார். அதனையும் ராஜேஷ் தனது பெற்றோரிடம் சொல்லவில்லை. தனது காதலியை பிரசவத்துக்காக கோகிலாபென் மருத்துவமனையில் சேர்த்தார். அவருக்கு நவம்பர் 7-ம் தேதி பெண் குழந்தை பிறந்திருக்கிறது. மருத்துவமனை கட்டணமாக ரூ.1.70 லட்சம் கட்டுமாறு கேட்டிருக்கிறார்கள். ராஜேஷ் தனது பைக்கை விற்பனை செய்தும் நண்பர்களிடம் கடன் வாங்கியும் ஒரு லட்சத்தை கட்டிவிட்டார். ஆனால், மேலும் 70,000 ரூபாய் செலுத்த வேண்டியிருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் திணறியிருக்கிறார் ராஜேஷ். காந்திவலி ஹனுமான் நகர் பகுதியைச் சேர்ந்த கீதா என்ற பெண் வட்டிக்கு பணம் கொடுப்பதாகக் கேள்விப்பட்டு அவரிடம் சென்று பணம் கேட்டிருக்கீறார். கீதாவும் 5 ரூபாய் வட்டிக்கு 70,000 ரூபாய் கொடுத்திருக்கிறார்.
குழந்தையும் தாயும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு, குழந்தையை எங்கு வளர்ப்பது என்ற கேள்வி இருவருக்கும் எழுந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதோடு குழந்தை பிறந்ததும் இருவரது வீட்டுக்கும் தெரியாது. எனவே இது குறித்து கீதாவிடம் ஆலோசனை நடத்தியிருக்கிறார். ஏற்கெனவே அவரிடம் ரூ.70,000 வட்டிக்கு கடன் வாங்கி இருந்ததால், தங்களது குழந்தையையும் பார்த்துக்கொள்ளும்படி இருவரும் கேட்டுக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. கீதாவும் பார்த்துக்கொள்வதாகத் தெரிவித்திருக்கிறார்.
Also Read: சென்னை: 3 மாதப் பெண் குழந்தை மீட்கப்பட்டது எப்படி? – தாயின் 18 மணி நேரப் பாசப்போராட்டம்
குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்காக ராஜேஷும் அவரது காதலியும் சேர்ந்து ஒவ்வொரு மாதமும் பணம் கொடுத்து வந்திருக்கிறார்கள். நாளடைவில் கீதா அதிக அளவில் பணம் கேட்டு மிரட்டத் தொடங்கியிருக்கிறார். ஒரு கட்டத்தில், `ரூ.2 லட்சம் கொடுக்கவில்லையெனில் குழந்தை குறித்து உங்களது பெற்றோரிடம் சொல்லி விடுவேன்’ என்று கீதா மிரட்டினார். இதனால் குழந்தை பிறந்தது குறித்து ராஜேஷும் அவரது காதலியும் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து கடனாக வாங்கிய 70,000 ரூபாயைத் திருப்பிக் கொடுப்பதாக இருவீட்டு குடும்பத்தாரும் கீதாவிடம் தெரிவித்தனர். ஆனால், `ரூ.2 லட்சத்துக்குக் குறைவாக வாங்க முடியாது. பணம் கொடுக்கவில்லையெனில் குழந்தையுடன் தலைமறைவாகிவிடுவேன்’ என்றும் கீதா மிரட்டினார். இதையடுத்து இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் விரைந்து செயல்பட்டு குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தம்பதியினர் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.