அசாம் மாநிலத்தில் 1,000 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் உறைந்த நிலையில் கண்டறியப்பட்டதை தொடர்ந்து அது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி வழங்கல் தொடங்கி விட்டது. நாடு முழுவதும் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கடந்த 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் மற்றும் சீரம் நிறுவனம் தயாரித்த கோவி ஷீல்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகிறது.
இதற்காக ஒவ்வொரு மாநிலத்துக்கும் தடுப்பூசிகள் பகிர்ந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அசாம் மாநிலத்திற்கு 2,21,500 டோஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில் 2,01,500 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் ஆகும். மீதமுள்ள 20,000 கோவாக்சின் தடுப்பூசிகள் ஆகும்.
இங்கு இதுவரை 5,542 சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இம்மாநிலத்தில் உள்ள சிர்கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1,000 டோஸ்கள் கோவிஷீல்ட் மருந்து, உறைந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளன.
இது குறித்து ஆய்வு நடத்தியதில் இந்த மருந்துகள் இம்மருத்துவமனையில் உள்ள குளிர்ப்பதன சேமிப்பு கிடங்கில் நடந்த தொழில்நுட்ப கோளாற்றால் உறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. உறைந்த இந்த மருந்துகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு அதன் திறன்கள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இந்த மருந்துகள் 2-8 டிகிரியில் சேமித்து வைக்க வேண்டிய நிலையில் அவை அதற்கும் குறைவான வெப்ப நிலையில் வைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த அசாம் மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.