தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலில் நடைபெறும் அதேசமயம் கேரள மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல் அமைச்சர் வேட்பாளர் யார் என்ற விவாதம் இப்போதே எழுந்துள்ளது. முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மற்றும் கேரள காங்கிரஸ் எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா ஆகியோரிடையே முதல்வர் வேட்பாளருக்கான போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணியில் உள்ள முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ரமேஷ் சென்னித்தலாவை மட்டும் முன்னிறுத்தி இந்த தேர்தலை எதிர்கொள்ள முடியாது என்ற கருத்தை காங்கிரஸ் தலைமைக்கு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் காங்கிரஸ் உயர்மட்ட குழு கூட்டம் நேற்று முதல் தொடங்கி நடந்து வருகிறது. இதில் கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமலே தேர்தலை எதிர்கொள்வது என்று காங்கிரஸ் உயர்மட்டக்குழு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், கேரள மாநில காங்கிரஸ் தேர்தல் குழு தலைவராக உம்மன் சாண்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த குழுவில் காங்கிரஸ் எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா, மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், முன்னாள் முதல்வர் கருணாகரனின் மகன் முரளீதரன், கே.சி.வேணுகோபாலன் உள்பட பலர் இடம்பெற்றுள்ளனர்.
வரும் சட்டசபை தேர்தலில் உம்மன் சாண்டியும், ரமேஷ் சென்னித்தலாவும் போட்டியிட உள்ளனர். உம்மன்சாண்டி போட்டியிட உயர்மட்டக்குழு பச்சைக்கொடி காட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து தேர்தலுக்கு பிறகு முடிவு செய்யலாம் என அந்த கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கேரள மாநில சட்டசபை தேர்தலில் தேசிய தலைமையின் வழிகாட்டுதல் பலமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே ஆன்றணி கேரள தேர்தலை கவனிக்கும் தலைமை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவித்த பிறகு தேர்தல் முடியும் வரை ஏ.கே ஆன்றணி கேரளத்திலேயே முகாமிட்டு பணியாற்ற வேண்டும் என தலைமை கேட்டுக்கொண்டுள்ளது. வேட்பாளர் தேர்வில் உயர்மட்ட குழுவின் தலையீடு அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.