உ.பியில் தன்னை பாலியல் வன்முறை செய்ய முயற்சித்த நபரிடமிருந்து போராடி தப்பித்த பெண் அந்த நபர்மீது காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.
உத்தரபிரதேசம் மாநிலம் பிலிபித் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் 30 வயது பட்டியலினப் பெண் ஒருவர் தனது கரும்பு தோட்டத்திற்கு பயிர்களைப் பார்க்கச்
சென்றிருக்கிறார். அவர் தனியாகச் செல்வதைப் பார்த்த 40 வயதான பக்கத்து வீட்டு நபர் அந்தப் பெண்ணை பின்தொடர்ந்து சென்று கரும்பு பயிர்களுக்கு நடுவே
தள்ளி அவரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்க முயற்சித்து இருக்கிறார். ஆனால் அந்தப் பெண் தைரியமாக அந்த நபரை பிடித்து அடித்து தள்ளிவிட்டு தாக்கியதுடன் கூச்சலிட்டு இருக்கிறார். அங்கு வயலில் வேலை செய்துகொண்டு இருந்தவர்கள் சத்தம் கேட்டு ஓடிவந்திருக்கின்றனர். நிறையப்பேர் வருவதைப் பார்த்த அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார்.
பாலியல் வன்கொடுமைக்கு முன்பே அந்த நபரிடமிருந்து தப்பித்த அந்த பெண், அருகிலிருந்த காவல் நிலையத்துக்குச் சென்று அவர்மீது புகார் கொடுத்திருக்கிறார். ஆனால் அவருடைய புகாரை ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கின்றனர். அதனால் அந்த பெண் கூடுதல் போலீஸ் இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்று புகார் கொடுத்திருக்கிறார். காவல்துறை இயக்குநரின் ஆணைப்படி, உள்ளூர் காவல்நிலையத்தில் அந்தப் பெண்ணின் புகாரை ஏற்றிருக்கின்றனர்.
புகாரின்பேரில் அந்த நபர்மீது, இந்திய சட்டப்பிரிவுகள் 354ஏ, 504, 232 மற்றும் 506-இன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் பட்டியலின இனத்தவர் மீதான தாக்குதலுக்காக மேலும் சில பிரிவுகள்மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.