மம்தா பானர்ஜியை தோற்கடிக்காவிட்டால் அரசியலில் இருந்தே விலகிவிடுவேன் எனக் கூறியுள்ளார் பாஜகவின் சுவேந்து ஆதிகரி.
அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கியுள்ளது மேற்கு வங்க மாநிலம். இதையடுத்து மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இந்த நந்திகிராம் தொகுதி ஆனது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து ஆதிகரியின் தொகுதி ஆகும்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானா்ஜி தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவியை வகித்து வந்த சுவேந்து ஆதிகரி, அப்பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்தும் விலகி, கடந்த டிசம்பர் மாதத்தில் அமித் ஷா முன்னிலையில் சுவேந்து ஆதிகரி பாஜகவில் இணைந்தார்.
இந்நிலையில் நந்திகிராம் தொகுதி மம்தா பானா்ஜி போட்டியிடுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுவேந்து ஆதிகரி, ‘’ மம்தா பானர்ஜியை தோற்கடிக்காவிட்டால் அரசியலில் இருந்தே விலகிவிடுவேன். எனினும், நந்திகிராம் தொகுதியில் நான் போட்டியிடுவது பற்றி பாஜக தலைமை முடிவு எடுத்து அறிவிக்கும்’’ எனக் கூறினார்.