அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் அல்பனி’க்கு (Albany) தெற்கே 19 கி.மீ. தொலைவில் இருக்கும் ஸ்கோடாக் (Schodack) நகரை சேர்ந்தவர் பூபிந்தர் சிங் (Bhupinder Singh). 57 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பூபிந்தர் சிங்குடன் 14 வயதான மகள் ஜஸ்லீன் கவுர், மற்றும் மாமியார் மன்ஜித் கவுர் என்பவரும் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், பூபிந்தர் சிங், தனது மகள் மற்றும் மாமியார் இருவரையும் வீட்டிற்குள் சுட்டுக் கொன்றுள்ளார். குடும்பத்தினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் பூபிந்தர் சிங், வீட்டில் வைத்திருந்த தன் துப்பாக்கியை எடுத்து மகள் மற்றும் மாமியாரை சுட்டுக் கொன்றுள்ளார் என்று நியூயார்க் நகர காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பூபிந்தர் சிங் துப்பாக்கியால் சுட்டதில், அவரது மகள் ஜஸ்லீன் கவுரும், மாமியார் மன்ஜித் கவுரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில், அந்த வீட்டில் இருந்த ராஸ்பல் கவுர் (Rashpal Kaur) என்ற 40 வயதான பெண் ஒருவரும் படுகாயம் அடைந்துள்ளார்.
மகள் மற்றும் மாமியார் இருவரையும் சுட்டுக் கொன்ற பூபிந்தர் சிங், துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையில் ராஸ்பல் கவுர், போலீசாரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து பேசிய நியூயார்க் நகர காவல்துறை, “கையில் குண்டடிப்பட்டு படுகாயம் அடைந்த ராஸ்பல் கவுர், வீட்டில் இருந்து தப்பித்துள்ளார். அவருக்கு அல்பனியிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை. அவரிடம் விசாரணை நடத்த காவல்துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர். விசாரணைக்கு பிறகே முழு விவரம் தெரியவரும்” என்று தெரிவித்துள்ளனர்.