மும்பையில் உள்ள குடிசைப்பகுதிகளில் பொதுவாக போதிய கழிவறை வசதி இருப்பதில்லை. பொது கழிவறைகளைத்தான் பயன்படுத்தவேண்டும். பொதுமக்கள் காலைக்கடனை கழிக்க வாழியில் தண்ணீர் எடுத்துக்கொண்டு பொதுக்கழிவறைக்கு செல்வது வழக்கம். இதற்காகவே குடிசைப்பகுதியில் ஏராளமான பொதுகழிவறைகளை மாநகராட்சி நிர்வாகம் கட்டிக்கொடுத்துள்ளது.
ஆனால் அவை சரியாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால் 88 மூதாட்டி ஒருவர் தனது வீட்டிற்கு அருகில் கழிவறை கட்ட போராடி வருகிறார். கிழக்கு மும்பையில் உள்ள முலுண்ட் நாகூர் சாலையில் உள்ள ரமாகாந்த் மாத்ரே தெருவில் சுசிலா மோரே(88) என்பவர் வசிக்கிறார். இவரது வீட்டில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் பொதுக்கழிவறை இருக்கிறது. அங்கு சுசிலாவால் நடந்து செல்ல முடியாது. அப்படியே செல்வதாக இருந்தாலும் வயது முதுமை காரணமாக துணைக்கு ஒரு ஆள் தேவையாக இருக்கிறது. எனவே அவர் தனது மகனிடம், வீட்டிற்கு அருகில் ஒரு கழிவறை கட்டும்படி கேட்டுக்கொண்டார். தனது தாயாரின் வசதிக்காக சுசிலாவின் மகன் வீட்டிற்கு அருகில் உள்ள இடத்தில் கழிவறை ஒன்றை கட்டினார். இதற்காக ஸ்வட்ச் மகாராஷ்டிரா அபியான் திட்டத்தின் கீழ் மாநில அரசிடம் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி அனுமதி பெறப்பட்டது. அதோடு மாநகராட்சி நிர்வாகத்திடமும் இதற்காக விண்ணப்பித்து 20,540 ரூபாய் கட்டணம் செலுத்தி அனுமதி பெற்று கழிவறையை கட்டினார்.
Also Read: மும்பை: `நல்லது நடக்கும்!’- ரத்தன் டாடாவின் போலி கார் நம்பருடன் சுற்றிய பெண்
ஆனால் கழிவறை கட்டி முடிக்கப்பட்ட பிறகு கடந்த நவம்பர் 24-ம் தேதி மாநகராட்சியின் கட்டடத்துறையில் இருந்து கடிதம் வந்தது. `கட்டடத்துறையில் இருந்து அனுமதி வாங்காத காரணத்தால் உடனே கழிவறையை இடிக்கவேண்டும் என்றும் அப்படி இடிக்கவில்லையெனில் நாங்களே இடித்துவிடுவோம்’ என்று எச்சரிக்கப்பட்டு இருந்தது. இதனால் சுசிலா குடும்பத்தினர் அதிர்ச்சிக்குள்ளானார்கள். இது குறித்து சுசிலாவின் மகன் அசோக்கிடம் கேட்டதற்கு, `டிசம்பர் 6-ம் தேதி மீண்டும் மாநகராட்சி ஒரு கடிதத்தை அனுப்பியது. இதனால் வேறு வழியில்லாமல் கழிவறையை இடித்துவிட்டு மீண்டும் மாநகராட்சியிடம் அனுமதி கேட்டோம். ஆனால் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டனர். இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை” என்று கவலையுடன் தெரிவித்தார்.
இது குறித்து அப்பகுதி வார்டு அதிகாரி கிஷோர் காந்தியிடம் கேட்டற்கு, “பெரிய வீடாக இருந்தால் உள்ளேயே கழிவறை கட்டிக்கொள்ள வேண்டும். ஆனால் இங்கு வீடு சிறிதாக இருப்பதால் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் கட்டப்பட்டுள்ளது. எனவே இதனை ஆக்கிரமிப்பாக கருதி இடிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் வீட்டிற்குள் கழிவறை கட்டிக்கொள்வதில் எந்த வித பிரச்னையும் இல்லை” என்று தெரிவித்தார். மாநகராட்சியின் இம்முடிவுக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மும்பையில் பொது கழிவறை இருந்தாலும் மக்கள் அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் திறந்த வெளியில் காலைக்கடனை கழிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் மாநகராட்சியின் இந்த நடவடிக்கை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: `பா.ஜ.க தலைமையகம்!’ – மும்பை அமலாக்கத்துறை அலுவலகம் முன் பேனர் வைத்த சிவசேனா