எப்படியாவது இந்த வேலையை வாங்கிக் கொடுங்கள், சித்தார்த் உடைந்துவிடுவார் என்று கெளதமிடம் சொல்கிறாள் அபி. அவனும் நண்பனிடம் கெஞ்சி வேலை போட்டுக் கொடுக்கச் சொல்கிறான்.
சேதுவுடன் வீட்டுக்கு வரும்போது கெளசல்யா குடும்பம் வந்திருக்கிறது. தம்பிக்கு வேலை கிடைத்ததற்காகப் பாயசம் செய்ததாகச் சொல்கிறார். தன் தம்பி திறமைக்கு வேலை கியூவில் நிற்கும் என்றெல்லாம் பெருமையடிக்கிறார். இதெல்லாம் இவர்களுக்குத் தெரியாது என்கிறான் சித்தார்த்.
எல்லோரும் ட்ரீட், ஷாப்பிங் செல்ல வேண்டும் என்கிறார்கள். சித்தார்த் சம்மதிக்கிறான். அபி இப்போ இந்தச் செலவு அவசியமா என்று கேட்க, சித்தார்த் எரிச்சலடைகிறான். ட்ரீட், ஷாப்பிங் எல்லாம் முடித்து வீட்டுக்கு வருகிறார்கள். உடனே கெளசல்யா, “சித்தார்த்துக்கு இஞ்சி டீ போடு. பிள்ளைகளுக்கு பூஸ்ட் கொடு. எனக்கு காபி போடு” என்று வரிசையாக வேலை ஏவுகிறார்.
அதைப் பார்த்த சேது, “என் தங்கையும்தான் டயர்டா இருக்கா. ஆபிஸ் வேலை, வீட்டு வேலை, அவுட்டிங்குனு… நீங்க போடக் கூடாதா?” என்று கேட்க, சித்தார்த் கோபப்பட்டு வெளியே போகச் சொல்கிறான்.
“அவர் கேட்டதில் என்ன தப்பு? எப்பப் பார்த்தாலும் அவரை அவமானப்படுத்திட்டே இருக்கீங்க? உங்களுக்கு அக்கானா எனக்கு அண்ணன். உங்க அக்காவை ஒண்ணும் சொல்லக்கூடாதுன்னா என் அண்ணனையும் நீங்க ஒண்ணும் சொல்லக் கூடாது” என்கிறாள் அபி.
“நீ ரொம்ப லிமிட் தாண்டறே?” என்கிறான் சித்தார்த்.
“என்ன அபி, சண்டைக்காரி மாதிரி பேசறே?” என்று அதிர்ச்சியடைகிறார் கெளசல்யா.
“இதுவரைக்கும் ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசியிருப்பேனா? நியாயமா கேட்டால் சண்டைக்காரியா? போன இடத்தில் யதார்த்தமா கெளதமைப் பார்த்தோம். அதை நீங்க இவர்கிட்ட தப்பா சொல்லிக்கொடுத்துட்டீங்க. ஒரு பப்ளிக் ப்ளேஸ்ல அடுத்தவங்க முன்னாடி தன் பொண்டாட்டியை எவ்வளவு கேவலமா பேசினார்? நான் வேலைக்கு வர மாட்டேன்னு இவர் எப்படிச் சொல்லலாம்?”
“நான் சொல்லாமல் யார் சொல்வாங்க? நான் உன் ஹஸ்பண்ட்?”
“ஹஸ்பண்ட்னா என்ன வேணா சொல்றதா? உங்களுக்கு யார் இந்த ரைட்ஸ் கொடுத்திருக்கா? என்னைக்காவது கரிசனமா பேசிருக்கீங்களா? மாசத்துக்கு ஒரு தடவை இவங்க வந்துடறாங்க. இவங்களுக்கும் சமைச்சுக் கொட்டறேன். இப்பக்கூடப் பேசலைன்னா எப்பப் பேசறது?” என்கிறாள் அபி.
அவர்களுக்கு மட்டுமல்ல… நமக்கும் ஆச்சர்யமாக இருக்கிறது! இது நினைச்சுப் பார்க்கிறதா இருக்கக் கூடாது.(?!)
அபி பேச ஆரம்பித்த உடனே விறுவிறுப்பாக இருக்கிறது.
இனி என்ன?
இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!
– எஸ்.சங்கீதா