விஜய் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில், ‘மாஸ்டர்’ திரைப்படம் இன்று வெளியானது. பட வெளியீட்டுக்காக கடந்த 9 மாதங்களாகக் காத்திருந்த ரசிகர்கள், திரையரங்குகளில் ஆரவாரத்துடன் ‘மாஸ்டர்’ படத்தை ரசித்து வருகின்றனர்.
’மாநகரம்’, ’கைதி’ வெற்றிகளைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த ‘மாஸ்டர்’ திரைப்படம், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வெளியிடப்படவில்லை. திரையரங்குகளில் தான் வெளியிடப்படும் என படக்குழு உறுதியாக அறிவித்தது. பொதுமுடக்கத் தளர்வுகளைத் தொடர்ந்து, ‘மாஸ்டர்’ திரைப்படம் இன்று வெளியானது.
சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் முதல் காட்சி, அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது. ‘மாஸ்டர்’ வெளியீட்டை ரசிகர்கள் மேள தாளத்துடன் உற்சாகமாகக் கொண்டாடினர்.
ஆனால், ரசிகர்கள் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை. கொண்டாட்ட மனநிலையில் தனிமனித இடைவெளியை மறந்து போயினர். 50 சதவிகித பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்க தமிழக அரசு அனுமதித்திருந்த நிலையில், தர்மபுரியில் ஒரு திரையரங்கில் அரங்கம் முழுவதும் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். பெரும்பாலான ரசிகர்கள் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை. உற்சாக மிகுதியால் தனிமனித இடைவெளியையும் ரசிகர்கள் மறந்தனர்.