கொரோனா தடுப்புக்காகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கோவிஷீல்டு தடுப்பூசி புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவில் தயாரிக்கபட்டு நாடு முழுவதும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வரும் 16-ம் தேதியில் இருந்து இந்தத் தடுப்பூசி போடப்பட இருக்கிறது. மகாராஷ்டிராவுக்கு மொத்தம் 9,63,000 டோஸ் வழக்கப்பட்டுள்ளது.
இதில் மும்பைக்கு 1,39,500 டோஸ் ஒதுக்கப்பட்டுள்ளது. அவை நேற்று அதிகாலை சிறப்பு வாகனத்தில் புனேயில் இருந்து வந்து சேர்ந்தன. பரேலில் உள்ள எப்-தெற்கு வார்டு அலுவலக கட்டடத்தில் அவை சேமிக்கப்பட்டுள்ளன. காஞ்சூர்மார்க்கிலும் தடுப்பூசியை சேமித்து வைக்க பிரத்யேகக் குளிர்சாதன வசதி கொண்ட சேமிப்புக் கிடங்கு வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1.2 கோடி டோஸ் சேமித்து வைக்க முடியும். அடுத்த இரண்டு நாள்களில் தடுப்பூசி மும்பையில் உள்ள 72 மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஒவ்வொரு மையத்திலும் ஒரு நாளைக்கு 100 பேருக்கு தடுப்பூசி போடப்படும். மும்பை தவிர தானே, புனே, கோலாப்பூர், நாசிக், அகோலா, நாக்பூர் உட்பட முக்கிய நகரங்களுக்கும் நேற்று இரவே தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இரண்டு கட்டமாக இந்தத் தடுப்பூசி போடப்படும். முதல் தடுப்பூசி போட்டதில் இருந்து 4 முதல் 6 வாரம் கழித்து இரண்டாவது தடுப்பூசி போடப்படும். சுகாதாரப் பணியாளர்களுக்கு மட்டும் முதல்கட்டமாகப் போடப்படும். இது குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே கூறுகையில், “தடுப்பூசி 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும், அலர்ஜி பிரச்னை இருப்பவர்களுக்கும் போடப்படாது. குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே முதல் கட்டமாக தடுப்பூசி போடத் திட்டமிட்டு இருக்கிறோம். மகாராஷ்டிராவில் மொத்தம் 511 இடங்களில் தடுப்பூசி போடப்பட இருக்கிறது. மும்பையில் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள இதுவரை 1.30 பேர் தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ளனர்’’ என்று தெரிவித்தார்.
தடுப்பூசி போட்டுக்கொள்ள வருபவர்கள் கட்டாயம் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பான்கார்டு அல்லது புகைப்படம் ஒட்டப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகம் கொண்டு வரவேண்டும். முன்னதாக CoWIN மொபைல் ஆப்பிலும் பதிவு செய்து கொள்ளவேண்டும்.
இதற்கிடையே மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50,000-த்தைத் தாண்டி இருக்கிறது. இதில் மும்பையில் மட்டும் 11,000-த்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதோடு, 3 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.