திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் காதலன் உள்ளிட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வாகரை தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனம் அருகே கடந்த 5 ஆம் தேதி 21 வயது இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் தென்னம்பட்டியைச் சேர்ந்த கதிர்வேல் என்பவரின் மகள் ஜெயஸ்ரீ என்று தெரியவந்தது. தனியார் நுற்பாலையில் பணி புரிந்து வந்த அந்த பெண் கடந்த 1 ஆம் தேதி வேலைக்கு சென்றநிலையில் வீடு திரும்பவில்லை. காவல்துறையினர் ஜெயஸ்ரீயை தேடிவந்தநிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஜெயஸ்ரீயின் செல்போனை ஆய்வு செய்தபோது, ஒரேநாளில் 20க்கும் மேற்பட்டமுறை ஒரே எண்ணிற்கு ஜெயஸ்ரீ பேசியது தெரியவந்தது.
இந்த எண்ணை ஆய்வு செய்தபோது அது ஜெயஸ்ரீயுடன் வேலை பார்க்கும் தங்கதுரை என்பவரின் எண் என்று தெரியவந்தது. தங்கதுரையை காதலித்து வந்த ஜெயஸ்ரீ விரைவில் திருமணம் செய்து கொள்ள காதலனை வற்புறுத்தியதாக தெரிகிறது. காதல் விவகாரம் தெரியவந்த பின் ஜெயஸ்ரீயை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதையடுத்து வீட்டைவிட்டு வெளியேறிய ஜெயஸ்ரீ, தங்கதுரையுடன் சென்றுள்ளார். அவர்களுடன் ஜெகநாதன் என்ற சக ஊழியரும் சென்றுள்ளார்.
ஆடைதயாரிப்பு நிறுவனத்தின் பின்புறம் நின்று மூவரும் பேசிக்கொண்டிருந்தநிலையில் வாக்குவாதம் முற்றியதில் ஜெயஸ்ரீயை தங்கதுரையும் ஜெகநாதனும் சேர்ந்து கொலை செய்துள்ளனர். இருவரையும் காவல்துறையினர் கைது செய்தநிலையில் பெண்ணின் உறவினர்கள் சாலைமறியல் செய்தனர். அவ்வழியாக வந்த நூற்பாலை வாகனத்தின் கண்ணாடிகளையும் உடைத்தனர். காவல்துறை பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. தங்கதுரை, ஜெகநாதன் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.